அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளிக் கட்சி துணைத் தலைவருமான திரு ஃபைசல் மனாப், காக்கி புக்கிட் தொகுதியில் மக்களைச் சந்திக்கும் நிகழ்வில் புதன்கிழமை கலந்துகொண்டார்.
அடைக்கப்பட்ட இதய ரத்தக் குழாய்களைத் திறக்க மேற்கொள்ளப்படும் இரு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சையை செய்துகொண்ட பிறகு ஆறு வாரங்கள் மருத்துவமனை விடுப்பில் அவர் இருந்தார்.
பாட்டாளிக் கட்சி வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், “புத்துணர்ச்சி பெற்றுள்ள திரு ஃபைசல் தமது பணிகளைத் தொடர தயாராக இருக்கிறார்,” என்று பதிவிட்டது.
இதயப் பிரச்சினைக்காக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திரு ஃபைசல், 48, அனுமதிக்கப்பட்டிருந்ததாக ஜூலையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமது பணிகளைக் கவனித்துக்கொண்ட பாட்டாளிக் கட்சியின் சக எம்.பி.க்களுக்கும் முன்னாள் எம்.பி.க்களான லோ தியா கியாங், பங் எங் ஹுவாட், லீ லி லியென் ஆகியோருக்கும் திரு ஃபைசல் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பாட்டாளிக் கட்சி கூறியது.
2011 முதல் அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி.யாக இருந்து வந்துள்ள திரு ஃபைசல், தாம் குணமடைய பிரார்த்தனை செய்துகொண்டோருக்கும் வாழ்த்து கூறியோருக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.