ஒயின் பானம் கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் இயக்குநர், தன்னிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த $338,811 பணத்தைக் கையாடல் செய்து, சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.
யூனிவர்சல் அசட்ஸ் குரூப் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த டாமினிக் சிம் குவோக் சிங், குற்றத்தைப் புரிந்த பிறகு 2015ல் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அவர் சிங்கப்பூருக்குத் திரும்பிவந்தபோது, வர்த்தக விவகாரத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 45 வயது சிம்முக்கு, வியாழக்கிழமை ஈராண்டு, இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
யூனிவர்சல் அசட்ஸ் குரூப் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்காக அல்லது முதலீட்டுக்காக ஒயின் பானம் வாங்கித்தரும் தொழிலில் ஈடுபட்டிருந்தது. 2005க்கும் 2009க்கும் இடையில், ஒயின் முதலீட்டைத் திரும்பவாங்கிக்கொள்ளும் திட்டத்தை நிறுவனம் வழங்கியது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட காலத்திற்குள் ஒயினை வாங்கிக்கொள்ள புதிதாக யாரும் கிடைக்காவிட்டால், முதலீட்டாளர்களே அவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ளவேண்டும்.
இந்நிலையில், சிம் இயக்குநராக இருந்த மற்றொரு நிறுவனமான கேமன் தீவில் ஒருங்கிணைக்கப்பட்ட த கிராண்ட் சஃபாயர் நிறுவனம், ரியல் வின் லிமிடெட் எனும் மற்றொரு கேமன் தீவு நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளில் பாதியை அந்நிறுவனத்திற்கே திரும்பக் கொடுத்தது.
இந்த ரியல் வின் நிறுவனத்திற்குச் சொந்தமான உல்லாசப் பயணக்கப்பல், சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
திரும்பக் கொடுக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு $800,000 எனத் தீர்மானிக்கப்பட்டது. இதில் சில கடன்களைக் கழித்த பிறகு, $338,811 மீதமிருந்தது.
இந்தத் தொகையை சீனாவிலிருந்த தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றும்படி ரியல் வின் நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரிடம் சிம் கேட்டுக் கொண்டார். அவரும் பணத்தை மாற்றினார்.
ஆனால், பங்கு வாங்குவதற்கு ஆரம்பத்தில் பணம் கொடுத்தது யூனிவர்சல் அசட்ஸ் குரூப் நிறுவனம் என்பதால், இந்தத் தொகை அந்நிறுவனத்திற்கே சொந்தமானது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கையாடல் செய்த பணத்தை சிம் திருப்பிக் கொடுக்கவில்லை.