துருக்கி நாட்டு முட்டைகளைச் சுவைக்கும் வாய்ப்பை சிங்கப்பூரர்கள் விரைவில் பெறவிருக்கின்றனர்.
துருக்கியிலிருந்து சிங்கப்பூருக்கு முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முட்டை ஏற்றுமதியாளர் பட்டியலில் 2019ஆம் ஆண்டு 12 நாடுகளே இடம்பெற்றிருந்தன. இப்போது பத்தொன்பதாவது நாடாக துருக்கி சேர்ந்துள்ளது. துருக்கிக்குமுன், ஏப்ரல் மாதம் இந்தோனீசியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
“நமது உணவு பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும் அதே வேளையில், அனைத்துலக உணவு விநியோகத்தில் நிலவும் நிச்சயமின்மைகளிலிருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும்,” என்று ஃபேஸ்புக்கில் அமைப்பு பதிவிட்டது.
எடுத்துக்காட்டாக, உலகளாவிய முட்டை பற்றாக்குறைக்கு எதிர்பாராத அளவிலான பறவைக் காய்ச்சலும், விநியோகத் தொடர் பிரச்சினைகளும், அதிகரித்துவரும் எரிபொருள், தீனி விலைகளும் காரணமாக உள்ளன.
சிங்கப்பூரில் உட்கொள்ளப்படும் முட்டைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இருபகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி மலேசியாவிலிருந்து வருகிறது. மீதி முட்டைகள் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, போலந்து, நியூசிலாந்து, ஜப்பான், கொரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறது. மூன்றில் ஒருபகுதி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் தற்போது மூன்று முட்டை பண்ணைகள் உள்ளன. நான்காவது பண்ணை 2024ல் செயல்படத் தொடங்கியதும், சிங்கப்பூருக்குத் தேவைப்படும் முட்டைகளில் கிட்டத்தட்ட பாதி உள்ளூரிலேயே உற்பத்தியாகும்.
சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நம்பகமான மூலங்களிலிருந்து வரவேண்டும் என்றும், கடுமையான உணவுப் பாதுகாப்பு, விலங்குநலத் தரங்களுக்கு உட்படவேண்டும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு முன்பு தெரிவித்தது. எடுத்துக்காட்டாக, பறவைக் காய்ச்சல் இல்லாத வட்டாரங்களிலிருந்து மட்டுமே முட்டைகளும் கோழிகளும் இறக்குமதி செய்யப்படலாம்.