பில்லியன் டாலர் சட்டவிரோதப் பண விவகாரம் தொடர்பில் சிக்கியுள்ள 10 பேரில் ஒருவர் மீது கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்ற குற்றச்சாட்டு புதிதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சைப்ரஸ் நாட்டவரான 40 வயது சு ஹைஜின் என்பவர் [Ϟ]மீது, கைது நடவடிக்கையைத் தடுத்த குற்றச்சாட்டு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்தது.
யூஓபி வங்கிக் கணக்கில் $4 மில்லியனுக்கு மேல் அவர் வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து இரண்டாவது குற்றச்சாட்டு பதிவானது. அந்தப் பணம் சட்டவிரோத இணையச் சூதாட்டக் குற்றங்களின் மூலம் கிடைத்தது என சந்தேகிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்தும் அவரது மனைவியிடம் இருந்தும் $160 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் இங் ஜீன் டிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதர குற்றவாளிகளிடம் நடத்தப்படும் விசாரணையோடு ஒப்பிடுகையில் சு ஹைஜின் மீதான விசாரணை சற்று குறைவான வேகத்தில் நடைபெறுவதால், அவரை மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றத்தின் அனுமதி கோரி அரசுத் தரப்பு வழக்கறிஞர் விண்ணப்பம் செய்தார்.
சு ஹைஜின் உடல்நலம் குன்றி இருந்ததால் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவே ஆறு, ஏழு நாள்கள் ஆனதாகவும் கடந்த திங்கட்கிழமை அவருக்கு அறுவை சிகிக்சை செய்யப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் இங் தெரிவித்தார்.
காவல்துறையிடம் இருந்து தப்பிக்க புக்கிட் தீமாவிலுள்ள தமது எவார்ட் பார்க் பங்களாவின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்தபோது அவரது கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை அவர் சாங்கி பொது மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சு ஹைஜினை மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதற்கிடையே, பில்லியன் டாலர் குற்ற வழக்கில் தொடர்புடைய 10 வெளிநாட்டவரில் ஒருவரான சீனாவைச் சேர்ந்த 31 வயது வாங் பாவோசென் என்பவரின் உறவினர் ஒருவர் அதிகாரிகளின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார்.
அவரது $100 மில்லியன் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இவர் தொடர்பான சாட்சியைக் கலைக்கும் ஆபத்து இருப்பதால் வாங் பாவோசென்னை பிணையில் விடுவிக்க வேண்டாம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.