புக்கிட் தீமாவில் துடைப்பம் ஒன்றைக் கொண்டு ஒரு வீட்டின் கூரையை இல்லப் பணிப்பெண் ஒருவர் கூட்டி சுத்தம் செய்த சம்பவத்தைப் பற்றி மனிதவள அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது.
அந்தச் சம்பவம் பற்றி ஆகஸ்ட் 31ஆம் தேதி தெரியவந்தது. அதைக் காட்டும் படங்களையும் காணொளியையும் அந்தப் பணிப்பெண்ணின் தோழியான திருவாட்டி ஜெரால்டைன், 35, என்ற வேறு ஓர் இல்லப் பணிப்பெண், சிங்கப்பூர் ஃபேஸ்புக் புகார் பக்கத்தில் பதிவேற்றினார்.
இதன்தொடர்பில் கேட்டபோது பதிலளித்த அமைச்சு, தான் அந்தச் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடத்தி வருவதை உறுதிப்படுத்தியது.
வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை பார்க்கும் இல்லப் பணிப்பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைச் சூழலைச் செய்துதர முதலாளிகள் தவறினால் அதைக் கடுமையான ஒன்றாக அமைச்சு கருதுகிறது.
இதனிடையே, இல்லப் பணிப்பெண் வீட்டின் கூரையைச் சுத்தப்படுத்திய சம்பவத்தைப் பார்த்து அதைப் படம் பிடித்த திருவாட்டி ஜெரால்டைன், கூரையைக் கூட்டி சுத்தப்படுத்தும்படி தன்னுடைய தோழியை அவருடைய முதலாளி பணித்து இருந்ததாகத் தெரிவித்தார்.