கேரளச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களை முன்னேற்றி வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டு மகானான ஸ்ரீ நாராயண குருவின் பெயரைத் தாங்கியுள்ள சிங்கப்பூரின் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் பராமரிப்பு இல்லம், அவரது 169ஆம் ஆண்டு ஜெயந்திக்காக இரு நாள் கொண்டாட்டங்களை நடத்தியது.
செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் கொண்டாட்டத்தில் கலாசார நிகழ்ச்சிகள், காத்திப் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள பல பயன் அரங்கில் நடைபெற்றது. கேரள கலாசார அங்கங்களைக் கொண்ட 300 பேர் பார்வையிட்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண குருவின் வாழ்கைக் குறிப்புகளும் அவர் போதித்த பண்புகளும் ஒட்டிய அங்கங்கள் இருந்தன.
இரண்டாம் நாள் கொண்டாட்டங்கள், ஈசூனில் அமைந்துள்ள இல்லத்திலேயே நடைபெற்றது. கேரளத் திருவோணக் கொண்டாட்டங்களையொட்டி மதிய நேர விருந்தாக 1,700 பேருக்கு வாழை இலையில் 21 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங்கும் உள்துறைத் துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
முதியோர் பராமரிப்புக்கான கூட்டாய்வுத் திட்டங்கள், சுகாதார கல்விப் பயிற்சிகளுக்கான கல்விமான் விருதுகள், தொண்டூழியம் உள்ளிட்டவற்றுக்காக ஸ்ரீ நாராயண மிஷன், பங்காளித்துவ நிறுவனங்களுடன் இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டது.
இந்நிகழ்ச்சி மலையாளச் சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைத்து சிங்கப்பூரர்களுக்குமானது என்று ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். தேவேந்திரன் குறிப்பிட்டார். கொவிட்-19 கிருமிப்பரவலால் இதனைக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கொண்டாடுவது சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்ட திரு தேவேந்திரன், இவ்வாண்டின் கொண்டாட்டங்கள் உற்சாகப் பெருக்குடன் நடைபெற்றதாகக் கூறினார்.

