பலதரப்பு அமைப்புகளின் ஆணை, விதிகளைப் புதுப்பிக்க பிரதமர் லீ வேண்டுகோள்

2 mins read
32b67df0-ac17-433c-9fa1-2bb29063ab10
ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. - படம்: இபிஏ

கடந்த 70 ஆண்டுகளாக வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வித்திட்ட பலதரப்பு அமைப்புகளின் சட்டப்படியான அதிகாரம், அவற்றின் விதிமுறைகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதை முக்கிய பணியாக மேற்கொள்ளவேண்டும் என்று ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் பலதரப்பு அமைப்பு முறை வலுவிழந்திருந்தாலும் அது உயிர்ப்புடன்தான் உள்ளது என்றும் தலைமைத்துவமும் மனஉறுதியும் கொண்டு இன்றைய சவால்களை எதிர்கொள்ள இணைந்து செயலாற்றவேண்டும் என்றும் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

பலதரப்பு அமைப்புகளை வலுவாக்குவதற்கு ஜி20 தலைமைத்துவம் உடனடியாகத் தேவைப்படுகிறது என்றார் அவர்.

உலக வர்த்தக நிறுவனத்தைச் சுட்டிக்காட்டி பேசிய திரு லீ, அந்நிறுவனத்தில் முழுமையாகச் செயல்படும் வகையில் பூசல்களைத் தீர்க்கும் கட்டமைப்பை உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார்.

மின்னிலக்க உருமாற்றத்தின் வேகத்திற்கு உலக வர்த்தக நிறுவனத்தின் சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு நவீன பொருளியலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதோடு ஒன்றுபட்ட உணவு, எரிசக்தி பாதுகாப்பையும் உறுதிசெய்ய ஏதுவாக அந்நிறுவனங்களின் சட்ட அடிப்படையிலான அதிகாரம் அமைய வேண்டும் என்று விளக்கினார்.

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சநிலை மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ‘ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய மேம்பாட்டு சவால்களுக்கும் உலக வளங்களின் பாதுகாப்புக்கும் நாம் உடனடியாகச் செயல்பட அனைத்துலக நிதிக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் மறுசீரமைப்புக் குறித்த ஆய்வை இந்திய நாட்டுத் தலைமைத்துவம் முயற்சி எடுத்து செய்ததை சிங்கப்பூர் ஆதரிக்கிறது என்ற பிரதமர், அடுத்த மாதம் வெளிவரவுள்ள ஆய்வறிக்கையைப் பெற ஆவலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிதித் தேவைகளின் அவசரமும் அளவும் மாபெரும் அளவில் உள்ளது என்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் நிதியை மேலும் சிறந்த வகையில் பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அத்துடன், மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணைபோகும் விதத்தில் பயன்படுத்தவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் புத்தாக்க முறையில் தனியார் துறையின் பங்களிப்பையும் உயர்த்த வேண்டும்; அதற்குப் புது வழிகள் தேவை என்றும் பிரதமர் லீ தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்