எஸ்எம்ஆர்டி நடத்தும் ஏழு ரயில், பேருந்து நிலையங்களில் தேசிய நூலக வாரியம் காலடி பதித்துள்ளதால் அதன் உருவாக்கத்தில் உருவான மின்னிதழ் மற்றும் மின்னூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்துப் பயணிகள் சஞ்சிகை மற்றும் நூல்களின் ‘கியூஆர்’ குறியீட்டை வருடி வாசிக்கும் சுவாரசியமான அனுபவத்தைப் பெறலாம்.
தொடக்கமாக ஏழு போக்குவரத்து நிலையங்களில் புதிய புத்தகப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு எம்ஆர்டி தடத்தில் ஒரு முனையில் உள்ள உட்லண்ட்ஸ் எம்ஆர்டி நிலையத்திலும் உட்லண்ட்சின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்திலும் இது இடம்பெற்றுள்ளது.
வரப்போகும் வாரங்களில் இதர ஐந்து நிலையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவிருக்கிறது என்று எஸ்எம்ஆர்டியும் தேசிய நூலக வாரியமும் கூட்டு அறிக்கையில் கூறியுள்ளன.
பீஷான், ஆர்ச்சர்ட், தியோங் பாரு எம்ஆர்டி நிலையங்கள், புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், சுவா சூ காங் பேருந்து நிலையம் ஆகியவை இதர ஐந்து நிலையங்களாகும்.
ஏழு புத்தகப் பகுதிகளை மார்ச் 2024 வரை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
நூலக அனுபவத்தை எல்லோரும் எல்லா இடங்களிலும் பெறும் தேசிய நூலக வாரியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவங்களை வழங்க வேண்டும் என்ற எஸ்எம்ஆர்டியின் நோக்கமும் இதன் மூலம் நிறைவேறுகிறது.
உட்லண்ட்சில் உள்ள நூல் நிலையத்தில் எட்டுத் தலைப்புகளில் கியூஆர் குறியீட்டுடன் மின்னிதழ் மற்றும் மின்னூல் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் கியூஆர் குறியீட்டை வருடி நூல்களை வாசிக்கலாம். இதற்கு தேசிய நூலக வாரியத்தின் கைப்பேசி செயலியைப் பயன்படுத்த வேண்டும். அச்செயலியில் புத்தகம் இரவல் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். வெவ்வேறு நிலையங்களில் வெவ்வேறு தலைப்புகளில் மின்னூல்கள் இடம்பெற்றுள்ளன.