டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகனச் சேவை வழங்குநர்களும் தங்களின் செயல்பாடுகளைக் கையாளும் விதம் குறித்து அதிகாரிகள் மறுஆய்வு மேற்கொண்டுள்ளனர். சவாரிகள் எளிதில் கிடைப்பதையும் உள்ளடக்கிய இந்த மறுஆய்வு, பயணிகளின் தேவைக்கு ஏற்பச் சேவைகள் இருப்பதை உறுதிப்படுத்தும்.
ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் சவாரி வழங்கும் போக்குவரத்துப் பிரிவில் பயணங்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, இந்த மறுஆய்வு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) புதன்கிழமையன்று அறிவித்தது.
சாலைகளில் நின்று டாக்சி சேவை பெறுவதையும் தனியார் வாடகை வாகனச் சேவை பெறுவதையும் உள்ளடக்கிய சவாரிகள் நாளுக்குச் சராசரியாக 18.6% அதிகரித்துள்ளன. 2020ஆம் ஆண்டு நவம்பரில் பதிவான 517,000 சவாரிகள் 2023 ஜூலையில் 613,000 ஆக அதிகரித்தன.
இந்நிலையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுஆய்வு 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய அளவில் மக்கள் நாடும் பொதுப் போக்குவரத்துக்குத் துணை போகும் வகையில் டாக்சி, தனியார் வாடகை வாகனச் சேவைப் பிரிவு முக்கியப் பங்கு வகிப்பதாக எல்டிஏ குறிப்பிட்டது.
இதற்கிடையே, மறுஆய்வு மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
சவாரிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் பின்னிரவு போன்ற நேரங்களில் டாக்சிகளின் எண்ணிக்கை, தனியார் வாடகை வாகனச் சேவைகள் விநியோகம் ஆகியவற்றின் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் அதில் ஒன்று. குறைந்த அளவிலான தடங்கலுடனும் கோளாறுகளுடனும் சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்வதும் இன்னோர் அம்சம். மூன்றாவதாக, சக்கர நாற்காலிப் பயனாளர்கள், இளம் பிள்ளைகள் கொண்ட குடும்பங்கள் ஆகியோரை உள்ளடக்கிய பயணிகளின் தேவைகளுக்கு ஏற்பச் சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதும் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மறுஆய்வுக்காக வெவ்வேறு பயணிப் பிரிவினரிடமிருந்து கருத்துகளும் திரட்டப்படும்.
இவ்வாறு ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் சேவை வழங்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் 63,000 என்று எல்டிஏ தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15% அதிகரிப்பாகும்.