சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக திரு தர்மன் சண்முகரத்னம், 66, வியாழக்கிழமை இஸ்தானாவில் பதவி ஏற்றார்.
அதிபராகப் பதவி ஏற்ற பிறகு உரையாற்றிய திரு தர்மன், நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான தன்னுடைய திட்டங்களை மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.
மக்கள் தனக்கு அளித்து இருக்கும் வலுவான ஆதரவைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் பல இனத் தன்மையைப் பலப்படுத்தப்போவதாகவும் மேலும் எல்லாரையும் உள்ளடக்கும் சமூகத்தைச் சாதிக்கப்போவதாகவும் அவர் உறுதி கூறினார்.
அரசாங்கம், சமூக அமைப்புகள், தொண்டூழிய அமைப்புகள் ஆகியவற்றோடும் முழு சிங்கப்பூரோடும் சேர்ந்து செயல்பட்டு மக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதையையும் அங்கீகாரத்தையும் மேம்படுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் சேமிப்புகளைப் பாதுகாப்பது, பொதுச் சேவையின் நேர்மையைக் கட்டிக்காப்பது தொடர்பான தன்னுடைய கடமைகளைச் சுதந்திரமாகச் செயல்பட்டு நிறைவேற்றப்போவதாகவும் திரு தர்மன் உறுதி கூறினார்.
சிங்கப்பூரர்களின் அதிபர் என்ற முறையில் மக்களிடம் முதல் உரை ஆற்றிய திரு தர்மன், ‘‘நீங்கள் புதிதாக தேர்ந்தெடுத்த அதிபராக இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.
‘‘என்னுடைய கடமைகளை, பணிகளை நான் என்னால் முடிந்த வரை சிறப்பாக நிறைவேற்றுவேன்.
‘‘சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூருக்கும் இன்னும் சிறந்த நிலையைச் சாதிக்க, நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காமல் என் கடமையை விடாமுயற்சியுடன் செம்மையாக நிறைவேற்றுவேன்,’’ என்று தெரிவித்தார்.
‘அனைவருக்கும் மரியாதை’ என்பது அதிபர் திரு தர்மனின் தேர்தல் பிரசார கருப்பொருளாக இருந்தது. அதை சாதிக்கப்போகும் தனது பாணி பற்றி திரு தர்மன் வியாழக்கிழமை விளக்கினார்.
சிங்கப்பூர் வலுவான நம்பிக்கை, ஐக்கியம் ஆகியவற்றுடன் பிணைப்புமிக்க பல இன சமூகமாகத் திகழ்கிறது. இருந்தாலும் நாம் சாதித்து இருக்கும் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை மனதில் நிலைநிறுத்தி வரும்படி மக்களை திரு தர்மன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
எல்லாரையும் உள்ளடக்கும் சமூகத்தை மேலும் பேணி பலப்படுத்த முயலப்போவதாகத் தெரிவித்த திரு தர்மன், கருணை, மரியாதை ஆகிய கலாசாரத்தைக் கூட்டாகப் பலப்படுத்தும்படி சிங்கப்பூரர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
நாட்டின் சேமிப்பு, முக்கிய பொதுச் சேவை நியமனங்கள் ஆகியவை தொடர்பில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது அதிபர் ஆலோசனை மன்றத்துடன் அணுக்கமாகச் சேர்ந்து செயல்பட்டு மன்றத்தின் கருத்துகளைச் செவிமடுத்து முடிவுகளை எடுக்கப்போவதாக திரு தர்மன் கூறினார்.
அதிபராக திரு தர்மன் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டதற்கு முன்னதாக திருவாட்டி ஹலிமா யாக்கோப்பிற்குப் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. திருவாட்டி ஹலிமா மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக் கொண்டார்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்ற திருவாட்டி ஹலிமாவின் பதவிக் காலம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
முன்னாள் அதிபர்கள் ஹலிமா யாக்கோப், டோனி டான் ஆகியோரும் அமைச்சர்களும் இதர பிரமுகர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதனிடையே, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு தர்மனுக்கு வியாழக்கிழமை சீன அதிபர் ஸி ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார்.
அதேபோல, பிரிட்டனின் மன்னர் மூன்றாவது சார்லஸ் திரு தர்மனுக்கு மனமுவந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.