சிங்கப்பூரில் சமூக ஊடகம் வழி தீவிரவாத மனப்போக்கிற்கு ஆளாகும் இளையர்கள் முன்பைவிட அதிகமாக இருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.
சமூகத் தொண்டூழியர்களுக்கான உள்துறை அமைச்சின் வருடாந்திர பாராட்டு விருந்தில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.
சிங்கப்பூரில் இப்போது பயங்கரவாத மிரட்டலை ஏற்படுத்துவதில் இணையத் தீவிரவாத மனப்போக்கு ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
சிக்கலான பிரச்சினைகள் சமூக ஊடகத்தில் எளிமையான முக்கியமற்ற விவகாரங்களாகக் காட்டப்பட்டு மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படுமாறு செய்யப்படுகின்றன.
இணையத்தில் தாங்கள் காண்பதைப் பற்றி இளையர்கள் சிறந்த முறையில் நல்லபடி புரிந்துகொள்ள உதவுவதில் சமூக தொண்டூழியர்களின் பணி முக்கியமானது என்பதை அமைச்சர் வலியுறுத்தினார்.
பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் சமூக ஊடகத்தில் இளையரைக் குறி வைத்து செயல்படுகிறார்கள்.
சிங்கப்பூரில், சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக் கொண்ட 49 பேருக்கு எதிராக 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் பாதுகாப்புப் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 11 பேருக்கு வயது 20க்கும் குறைவு என்பதை அமைச்சர் சுட்டினார்.
அந்த 11 பேரில் ஐவர் சிங்கப்பூரில் தாக்குதல்களை நடத்த திட்டம் போட்டு இருந்ததாக அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய விவகாரங்களை உடனுக்குடன் விரைவாகக் கையாள அரசாங்கத்திடம் சட்டங்களும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.
இருந்தாலும் ஒவ்வொருவரும் சேர்ந்து இளையருக்கு உதவி அவர்கள் இணையத்தில் காண்பவற்றைப் பற்றி சிறந்த முறையில் நல்லபடி புரிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டும்.
சமயத்தைப் பற்றி இளையர்கள் சிறந்த முறையில் புரிந்துகொள்ளுமாறு செய்து தொண்டூழியர்கள் உதவவேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொய்யான பிரசாரங்கள் இளையரிடம் எளிதாக எடுபடாமல் போய்விடும் என்று அமைச்சர் கூறினார்.