செமக்காவ் தீவுதான் சிங்கப்பூரின் குப்பையைக் கொட்டும் ஒரே ஒரு கிடங்காக இருக்கிறது. அங்கு கழிவுகள் எரிக்கப்படுவதால் எஞ்சக்கூடிய சாம்பலை இதர நோக்கத்திற்குப் பயன்படுத்தலாமா என்பது பற்றி இப்போது ஆய்வு நடந்து வருகிறது.
துவாஸ் துறைமுகத்தை அமைப்பது போன்ற இதர பயனீட்டிற்கு அந்தச் சாம்பலைப் பயன்படுத்த முடியுமா என்பது ஆராயப்பட்டு வருகிறது.
செமக்காவ் 2035ல் முழுமையாக நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து எடுக்கப்படும் சாம்பலை வேறு பயனீட்டிற்குப் பயன்படுத்துவது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அண்மையில் புளூம்பர்க் சுற்றுச்சூழல் தொழில்துறை உச்சநிலை மாநாட்டில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
செமக்காவ் தீவு 350 ஹெக்டர் பரப்பளவு உள்ளது. 28 மில்லியன் கனமீட்டர் கழிவுகளை அதில் கொட்ட முடியும். அங்கு இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியின் நடுவே தனித்தனியாக தடுக்கப்பட்டு 11 குப்பை கொட்டும் இடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டாவது பகுதி 157 ஹெக்டர் பரப்புள்ளது. அது கடலில் மீட்கப்பட்ட நிலப்பகுதி.
முதல் பகுதி நிரம்பிவிட்டது. ஆகையால், சிங்கப்பூர் இப்போது கழிவுகளை இரண்டாவது பகுதி இடத்தில் கொட்டி வருகிறது.
செமக்காவ் தீவில் சேரும் குப்பைக்கூளங்கள் எரிக்கப்பட்டதும் முக்கியமாக மூன்று வகை கழிவுகள் சேர்கின்றன.
கழிவுகள் எரிக்கப்பட்டதும் கீழ்மட்டத்தில் தங்கக்கூடிய சாம்பல்தான் அதிகம். இது அதிக எடை கொண்டது.
திடப்பொருள்கள் எரி ஆலையின் அடிப்பகுதியில் தங்கி விடுகின்றன. காற்றில் புகை போல பரவிவிடக்கூடிய கண்ணுக்குத் தெரியாத சாம்பலால் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படாது.
எரிக்க முடியாத கழிவுநீர் போன்ற கசடும் கீழே சேரும்.
தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் அத்தகைய கழிவுகளை வேறு பயனீட்டிற்குப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகின்றன.
துவாஸ் துறைமுகத்தின் மூன்றாவது கட்டத்தின் கட்டுமானத்தில் அவற்றைப் பயன்படுத்தி தாழ்வான பகுதிகளை மேடாக்க முடியுமா என்பது பற்றி அவை ஆராய்ந்து வருகின்றன.
பிரதமர் லீ சியன் லூங் 2022 ஆகஸ்ட்டில் தேசிய தினப் பேரணி உரையில் துவாஸ் துறைமுகத்தில் இரண்டாம் கட்டத்திற்கான நிலமீட்புப் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
துவாஸ் துறைமுகத்தில் மூன்றாவது கட்டத்திற்கான திட்டங்களும் தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்தத் துறைமுகம் மொத்தம் நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும். அதற்கு மொத்த செலவு $20 பில்லியனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது நடந்து வரும் ஆய்வில் உயர்கல்வி நிலையங்கள், ஆலோசனை நிறுவனங்கள் ஆகியவற்றின் வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தகைய மறுபயனீட்டுக் கழிவுகளைச் சுத்தப்படுத்துவதற்கான பொருத்தமான வழிகளை மதிப்பிடுவார்கள்; செலவு சிக்கன வழிகளையும் பகுத்து ஆராய்வார்கள்.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கருத்து கூறிய நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டுமான சுற்றுப்புற பொறியியல் பள்ளியின் இணைப் பேராசிரியர் ஃபெய் ஜுன்சாங், தன்னுடைய ஆய்வுக் குழு இப்போது செமக்காவ் முதல் பகுதியில் உள்ள பல்வேறு கழிவு வீழ்படிவுகளை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் அவற்றைக் கட்டுமான சாதனங்கள் போன்ற இதர பயனீட்டிற்குப் பயன்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிக்க ஆய்வு நடப்பதாக அவர் கூறினார்.
இவரும் இவருடைய குழுவினரும் பலமுறை செமக்காவ் தீவிற்குச் சென்று கழிவு மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ந்து வருகிறார்கள்.