டான் டோக் செங் மருத்துவமனைக்கு அருகே கார் ஒன்று மீது டாக்சி மோதியதில் மூவருக்குக் காயம் ஏற்பட்டது.
விபத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மாண்டெலே சாலைக்கும் மோல்மென் சாலைக்கும் இடையே உள்ள சந்திப்பில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து தொடர்பான காணொளி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
காணொளியில் டாக்சி ஒரு கறுப்பு கார் மீது மோதுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
விபத்துக்குள்ளான கறுப்பு கார் தடம்புரண்டு தடுப்புகள் மீதும் மரம் மீதும் மோதியது.
தடம்புரண்ட கார், பாதசாரி ஒருவருக்கு மிக அருகில் வந்து நின்றது. பாதசாரிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
கறுப்பு காரில் இருந்த 61 வயது ஆண் ஓட்டுநர், அவருடன் பயணம் செய்த 45 வயது பயணி, 68 வயது டாக்சி ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களில் இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பான விசாரணைக்கு டாக்சி ஓட்டுநர் உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.