உள்துறைக் குழுவின் பிரிவுகளும் உள்துறை அமைச்சும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலையிடப் பாகுபாடு குறித்த 310 சம்பவங்களைக் கையாண்டன என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமை தெரிவித்தார்.
அவற்றில் 131 சம்பவங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டன. அதில் தொடர்புடைய உள்துறைக் குழுவின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் ஒன்பது சம்பவங்கள் பற்றி பொதுச் சேவைப் பிரிவுக்கும் உள்துறை அமைச்சு தலைமையகத்துக்கும் நேரடியாகப் புகாரளிக்கப்பட்டன என்றும் திரு சண்முகம் தமது நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிவில் விவரித்தார்.
வேலையிடத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி உள்துறைக் குழு அதிகாரிகள் எவ்வாறு புகார் அளிக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் சண்முகம் இவ்வாறு பதிலளித்தார்.
தனது வேலையிடத்தில் தான் இனவெறிச் செயலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானதாக சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர், கடந்த ஜூலை மாதத்தில் ஈசூனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குக்குக் கீழ் இறந்துக் கிடக்க காணப்பட்டார்.
“தனது மேலதிகாரிகளும் சக அதிகாரிகளும் தன்னைத் துன்புறுத்தியதாகவும் தன் மீது இன அவதூறுகளைக் கூறியதாகவும் மாண்ட அந்த அதிகாரி தெரிவித்த புகார்களின் தொடர்பில் காவல்துறை தீவிரமாக புலனாய்வுகளை மேற்கொண்டது.
“2015ஆம் ஆண்டிலிருந்து நடந்ததாகக் கூறப்படும் இச்செயல்கள் பற்றி முன்னரே தங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது என்று கூறிய காவல்துறை அவை ஆதாரமற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்தது,” என்றும் அமைச்சர் விளக்கினார்.
“வேலையிடப் பாகுபாட்டுக்கு எதிராக உள்துறை அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது. அதன் தொடர்பான எல்லா புகார்களும் தீவிரமாக விசாரிக்கப்படும். அவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் தவறான செயல்கள் நிரூபிக்கப்பட்டால், அந்த அதிகாரி எந்த பதவி நிலையில் இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை பாயும்,” என்றும் திரு சண்முகம் தமது எழுத்துபூர்வ பதிலில் கூறினார்.
தங்கள் மேலதிகாரிகள் வேலையிடப் பாகுபாட்டுடன் நடந்துகொள்கிறார்கள் என்று அதிகாரி ஒருவர் புகார் அளிக்க விழைந்தால், அவர் பயமின்றி எவ்வாறு புகார் அளிக்கலாம் என்று புக்கிட் பாத்தோக் தொகுதி உறுப்பினர் முரளி பிள்ளையும் அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் சில்வியா லிம்மும் கேள்வி எழுப்பினர்.
வேலையிடப் பாகுபாடு, தவறாக நடத்தப்படுதல் போன்ற புகார்களை அதிகாரி ஒருவர் தனது நேரடி மேலதிகாரி, பிரிவின் தலைவர் அல்லது இயக்குநர், உள்துறைக் குழுவின் மூத்த தலைமைத்துவ அதிகாரி ஆகியோரிடமும், உள்துறை அமைச்சு தலைமையகத்திலும் தெரிவிக்கலாம் என்றார் திரு சண்முகம்.
வேலையிடப் பாகுபாடு, நியாயமற்ற நடைமுறைகள், ஒழுங்கீனம் தொடர்பான அனைத்துப் புகார்களும் சம்பந்தப்பட்ட தலைமைத்துவ அதிகாரிகளுக்குச் செல்வதற்கான தெளிவான வழிமுறைகள் உள்ளன என்றும் அவை மிகவும் கவனமாக, நிபுணத்துவ முறையில் புலனாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.