நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில் இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இரண்டு விபத்துகளிலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது ஊழியர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஒருவர் அவர் மீது மோதினார்.
இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இந்த இடத்தில் லே சூன் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் கட்டுமானப் பணியை மேற்கொண்டது.
இந்த நிலையில், வேலையிடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நிலப் போக்குவரத்து ஆணையத்தின் நடைமுறைகளை, வழிகாட்டிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.
இரண்டாவது சம்பவம், செப்டம்பர் 16ஆம் தேதி 10.45 மணிக்கு கேவனாக் ரோட்டில் உள்ள வேலையிடத்தில் நிகழ்ந்தது.
எரிவாயுத் தோம்புகள் சரிந்துவிழுந்ததில் 41 வயது பங்ளாதேஷ் ஊழியர் சிக்கிக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் படுகாயம் காரணமாக உயிரிழந்தார்.
ராயல் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் இங்கு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவந்தது.
இதையடுத்து, அங்கு லெய்ட்டன்-யோங்னாம் நிறுவனத்தின்கீழ் நடைபெறும் அனைத்து கட்டுமானிப் பணிகளும் நிறுத்த உத்தரவிடப்பட்டது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே, ஆணையத்தின் பாதுகாப்பு, சுகாதார, சுற்றுச்சூழல் விருது நிகழ்ச்சியில் பேசிய இடைக்கால போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், இவ்வாண்டு முதல் எட்டு மாதங்களில் 33 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உயர்பாதுகாப்பு கட்டாயமாக்கப்பட்ட காலத்திலிருந்து வெளியேறிவிட்டாலும் பாதுகாப்பு நடைமுறைகளில் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.