கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரின் பொருளியல் வலுவாக மீண்டு வந்ததன் காரணத்தால் சாதனை அளவாக 2022 நிதியாண்டில் அரசாங்கத்துக்கு $68.6 பில்லியன் கிடைக்கப் பெற்றது.
நடப்பு நிதியாண்டில் கிடைத்த சிறப்பான வரி வசூல், நிலையற்ற உலகளாவிய பொருளியல் நிலவரத்தால் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் தொடருமா என்பது குறித்து தெளிவற்ற நிலை உள்ளது என்று நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பொருளியல் செயல்திறனுக்கும் வரி வருவாய்க்கும் சிறிய கால இடைவெளி உள்ளது. ஆக, தற்போதைய நிதியாண்டில் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்தில் வசூலாகும் வரி, பல மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொருளியல் நடவடிக்கையைச் சார்ந்ததாக இருக்கலாம்,” என்றும் திரு சீ விவரித்தார்.
எஞ்சியுள்ள தற்போதைய நிதியாண்டுக்கான வரி வருமானம் குறித்து வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி எம்.பி. ஆங் வெய் நெங் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “உலகப் பொருளியலில் ஆங்காங்கே கருமேகங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நாம் கண்ட வலுவான பொருளியல் நிலை இந்த ஆண்டும் தொடருமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை,” என்றார்.
2022 நிதியாண்டில் கிடைக்கப் பெற்ற வரி வருவாய் அரசாங்கத்தின் செயல்பாட்டு வருவாயில் 75.4 விழுக்காட்டையும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.7 விழுக்காட்டையும் பிரதிநிதிக்கிறது என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் செப்டம்பர் 6ஆம் தேதி தெரிவித்தது.
இந்த நிதியாண்டில் கிடைக்கப் பெற்ற $68.6 பில்லியன் தொகை, கடந்த நிதியாண்டில் கிடைக்கப் பெற்ற தொகையைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகம். இந்த முன்னேற்ற நிலை, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முன் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.