உணவு விநியோக நிறுவனமான ‘டெலி ஹப் கேட்டரிங்’ தயார் செய்த உணவைச் சாப்பிட்ட 21 பேருக்கு இரைப்பைக் குடல் அழற்சி ஏற்பட்டது. அதையடுத்து, அந்நிறுவனத்துக்கு புதன்கிழமை $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், அதன் உணவைச் சாப்பிட்டவர்கள் நோய்வாய்ப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் அந்த உணவு விநியோக நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டன.
பாதிக்கப்பட்டவர்களில் எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
தான் விழிப்புடன் இருந்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமல்படுத்தினாலும், உணவுத் துறையும் பயனீட்டாளர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று உணவு அமைப்பு வலியுறுத்தியது.
உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வளாகங்கள் தூய்மையாக இருப்பதையும் நன்கு பராமரிக்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று உணவு அமைப்பு எச்சரித்தது. முறையான உணவு சுகாதாரம், பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு அவை நடக்கவேண்டும் என்று கூறிய உணவு அமைப்பு, உணவு விற்பனைச் சட்டத்தை மீறுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க தான் தயங்கப்போவதில்லை என்றது.
குற்றம் புரிவோருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு, குற்றம் நிரூபணமான பிறகு குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக $100 அபராதம் விதிக்கப்படலாம்.


