அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி வரை தமிழ்மொழி விழா நடைபெறவுள்ளது. வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்த 18வது தமிழ்மொழி விழாவில் முதல்முறையாகப் பொதுமக்களுக்கு நிகழ்ச்சிகள் நிகழ்த்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்மொழி விழா அடுத்தாண்டு ‘ஆற்றல்’ எனும் கருப்பொருளில் இடம்பெறும். வழக்கமாகத் தமிழ்மொழி விழாவை ஒட்டிச் சமூகப் பங்காளிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு புதுமையான வடிவில் தமிழ்மொழி மீது அதிக ஆர்வம் கொண்ட இதர அமைப்புகளும் தங்கள் ஆற்றலை நிகழ்ச்சிகள் மூலம் பகிர அவர்களின் திட்டங்களைச் சமர்ப்பிக்கலாம்.
புதன்கிழமை மாலை தேசிய நூலகத்தின் ‘போட்’ அரங்கில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தமிழ்மொழி விழாவை ஒட்டிப் பங்குதாரர்களுக்காக வளர்தமிழ் இயக்கம், விளக்கவுரை அங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தப் புதிய முயற்சி அறிவிக்கப்பட்டிருந்தது.
வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவரான ஜோதி மாணிக்கவாசகம், “எப்போதும் நடப்பது போல் அல்லாமல் நாங்கள் புதிய மாற்றத்தை வரவேற்க முனைந்துள்ளோம். இதன் மூலம் இளையர்களை உள்ளடக்குவதோடு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்களுக்கு நாம் கொண்டு சேர்க்கலாம். இந்தப் புதிய முயற்சியால் தரமான நிகழ்ச்சிகளை எங்களால் நடத்த முடியும்,” என்று பகிர்ந்துகொண்டார்.
தமிழ்மொழி விழாவில் நிகழ்ச்சி படைக்க ஆர்வமுள்ளோர் அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் தங்களின் திட்டங்களை முன்மொழிந்து சமர்ப்பிக்க NHB_TamilLanguageCouncil@nhb.gov.sg மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.