வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது நகர மையம் மறுஉருவாக்கத் திட்டத்தின்கீழ்’ (ஆர்ஓஎச்) அங் மோ கியோ மக்களுக்கு மேம்பட்ட பல வசதிகள் கிடைக்க இருக்கின்றன.
அந்தத் திட்டத்தின்படி, புதிய சமூக இடவசதிகள், மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகளுடன் புதிய பொலிவுடன் இளமை அழகுடன் அங் மோ கியோ நகர மையம் திகழும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆய்வு நடத்தி திரட்டிய தகவல்கள், குழு விவாதிப்புகளில் இருந்து பெறப்பட்ட யோசனைகள், கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அங் மோ கியோவுக்கான திட்டங்கள் அமலாகின்றன.
அவை அந்த நகருக்கும் அக்கம்பக்க மையங்களுக்கும் புதிய பொலிவை, புது தெம்பை, புத்துணர்வை அளிப்பதில் ஒருமித்த கவனம் செலுத்தும்.
புதிய சமூக இடங்களை ஏற்படுத்துவது, மக்களுக்கு அருகாமையில் பசுமை வளத்தை உருவாக்குவது ஆகியவையும் இடம்பெறும்.
அங் மோ கியோ ஹப் என்ற மையத்தில் சனிக்கிழமை அங் மோ கியோ ஆர்ஓஎச் கண்காட்சி தொடங்கியது.
கெபுன்பாரு தனித்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் ஹென்றி குவெக், அந்தக் கண்காட்சியில், இந்தத் திட்டங்களையும் இதர புத்துயிர் திட்டங்களையும் அறிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங் திட்டத்தின் முதல் கட்டத்தை 2022 ஆகஸ்டில் அறிவித்து இருந்தார். புத்துயிர் திட்டங்களை அங் மோ கியோ நகர மையம் நிறைவேற்றுகிறது. முதல் கட்ட திட்டங்கள், கட்டம் கட்டமாக 2024 இரண்டாவது காலாண்டில் நிறைவடையும்.
இரண்டாம் கட்ட திட்டங்கள் 2027 வாக்கில் நிறைவேறும்.
நடையர் உலாபாதையைக் கூரையுடன் கூடிய பாதையாக மேம்படுத்தி, அதை அங் மோ கியோ ஹப்புடன் இணைப்பது, அந்தப் பாதையைச் சுற்றிலும் நிழலுடன் கூடிய இருக்கைகள், நகர மையத்திற்குள் மேலும் சாய்தளப்பாதைகள் ஆகியவை முதல் கட்டத்தில் செய்து முடிக்கப்படும்.
நகர மையத்திற்கு மேலும் சுறுசுறுப்பைக் கொடுக்கும் வகையில் ஒரு சிறு சுற்றுப்பாதை போன்று வடிவமைக்கப்படும் விளையாட்டு இடம், பிராட்வே பிளாசாவுக்கு அருகே உள்ள திறந்த இடத்தைப் பல தலைமுறையினருக்கும் உரிய வசதிகளுடன் சமூக இடமாக்குவது ஆகியவை இரண்டாம் கட்டத்தின்கீழ் இடம்பெறும்.
அந்த நகர மையத்திற்குள் மேலும் கடை இடங்கள் உருவாக்கப்படும். அந்த நகரத்தின் தோட்டங்களையும் பீஷான்-அங் மோ கியோ பூங்காவையும் அங் மோ கியோ நகர மையத்துடன் இணைக்கும் வகையில் ‘கார்டன் லூப்’ என்ற புதிய பொழுதுபோக்கு வழித்தடம் அமையும்.
அந்த வழித்தடம் நெடுகிலும் புதிய சமூக வசதிகள், சிறுசிறு பூங்காக்கள் இருக்கும்.
தேசிய பூங்காக் கழகம், அங் மோ கியோ மேற்குத் தோட்டத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் கொண்டுள்ளது.
மேபிளவர் சந்தை, உணவு நிலையம், மேலும் பசுமையுடன் அதிக இருக்கைகளுடன் புதிய வழிகளுடன் மேம்படுத்தப்படும்.
போக்குவரத்து கருப்பொருளுடன் கூடிய புதிய விளையாட்டு இடம் சைக்கிளோட்டிகளுக்கு ஓய்விடமாகவும் இருக்கும். நகர மைய நுழைவாயிலில் நிழலுடன் கூடிய இருக்கைகள் இருக்கும்.
குறுக்குத் தீவு எம்ஆர்டி ரயில் தட கட்டுமானம் தொடங்கி இருக்கிறது. அது முடிவடையும்போது புதிய அங் மோ கியோ முனையம் உருவாகும்.
பூமிக்குக் கீழே புதிதாக டெக் கீ ரயில் நிலையம் அமைக்கப்படும். இதன்மூலம் சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்கு வசதி ஏற்படும். பயண நேரமும் மிகவும் குறையும்.
அடுத்த சில ஆண்டுகளில் இயோ சூ காங் பீகான், கெபுன் பாரு எட்ஜ், அங் மோ கியோ சென்ட்ரல் வீவ் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 1,800 புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும்.
அவை குடியிருப்பாளர்களுக்குப் புதிய வர்த்தக வசதிகளையும் சமூக ஒன்றுகூடல் வசதிகளையும் ஏற்படுத்தித் தரும்.
அங் மோ கியோவில் இளம் குடும்பத்தினர் வசிப்பதற்கான புதிய வாய்ப்புகளும் அவற்றால் உருவாகும்.