$10 விலையுள்ள உணவுப்பொருளை இணையத்தில் கேட்ட ஒரு மாது $44,000 தொகையை இழந்துவிட்டார். மோசடிப்பேர்வழிகள் அந்த மாதின் ஆன்ட்ராய்டு கைப்பேசியைத் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தி அவருடைய வங்கிக் கணக்குகளையும் எல்லாம் தெரிந்துகொண்டு பணத்தை எடுத்துவிட்டார்கள்.
திருவாட்டி ஜாக்குலின் கூ, 58, என்ற அந்த மாது இரண்டு கடன் அட்டை கணக்குகள், மூன்று பிஓஎஸ்பி வங்கிக் சேமிப்புக் கணக்குகளில் இருந்து மொத்தம் $44,487 தொகையை இழந்துவிட்டார்.
கிராப்&கோ (“Grab&Go”) என்ற மூன்றாம் தரப்பு செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்த அவர், அதில் காணப்பட்ட ஓர் இணைப்புக்குச் செல்ல முயன்றார். சில மணிகளிலேயே பணம் போய்விட்டது.
ஃபேஸ்புக்கில் விளம்பரத்தைப் பார்த்து விருப்பப்பட்டு $10 விலைக்கு உணவுப்பொருளை வாங்கப் போய் அந்த மாதுக்கு இந்தக் கதி ஏற்பட்டுவிட்டது.
அந்த மாது நாடாளுமன்ற உறுப்பினர் லாரன்ஸ் வோங்கின் உதவியை நாடினார்.
பிஓஎஸ்பி வங்கி, சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையிடம் புகாரும் செய்தார்.
இதை உறுதிப்படுத்திய காவல்துறை புலன்விசாரணை தொடர்வதாகத் தெரிவித்தது.

