நியூயார்க்: ஆழ்கடலைப் பாதுகாக்க ஏதுவாக ஒரு புதிய உடன்பாட்டைக் காண வேண்டும் என்பதில் உலகம் ஆக்ககரமான எழுச்சியுடன் செயல்பட்டது.
அதே எழுச்சியுடன் பலதரப்பு வர்த்தக ஏற்பாட்டு முறையையும் உலகம் பலப்படுத்த வேண்டும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஐநா பொதுப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நியூயார்க்கில் இப்போது நடக்கும் ஐநா கூட்டத்தின்போது 81 நாடுகள் அந்த ஆழ்கடல் உடன்பாட்டை தொடங்கின.
அந்த உடன்பாட்டிற்கு ‘தேசிய எல்லை கடந்த உயிரின பன்மய உடன்பாடு’ என்று பெயர். அந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் சீனாவும் கூட ஆர்வம் காட்டின.
அத்தகைய ஒட்டுமொத்த விருப்பத்தை உலகம் பலதரப்பு வர்த்தக ஏற்பாட்டு முறையிலும் காட்ட வேண்டும் என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.
ஆழ்கடல் உடன்பாட்டில் நாம் காட்டிய ஆக்ககரமான எழுச்சி உணர்வை உலகின் பொதுவான இதர துறைகளிலும் நாம் காட்ட வேண்டி இருக்கிறது.
இயந்திர மனிதத் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கத் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளிலும் அதே எழுச்சி உணர்வை உலகம் புலப்படுத்த வேண்டி இருக்கிறது என்று ஐநாவில் சிங்கப்பூரின் தேசிய அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
தேசியவாதமும் ஜனரஞ்சகமயமும் அதிகமாவதால் அனைத்துலக அமைப்புகள் பலவீனமடைந்து இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில், பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை போன்ற உலக சவால்களைச் சமாளிக்கும் அளவிற்கு ஐநா இன்னமும் பொருத்தமான நிலையில் இருக்கிறதா என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
உலக நெருக்கடிகளுக்கு விரைவாக செயல்படுவதில் அந்த அமைப்பு மந்தமாக இருக்கிறது என்றும் அதனிடம் போதிய ஆற்றல் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
இருந்தாலும் இதில் ஐநா அமைப்புதான் தலைமை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
ஐநா என்பது பெரும்பாலான நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய ஓர் அமைப்பு. உலகச் சவால்களைச் சமாளிப்பதில் ஒட்டுமொத்த முயற்சிகளின் மையமாக ஐநாவே திகழவேண்டும் என்று டாக்டர் விவியன் கூறினார்.
பல தரப்பு ஏற்பாட்டு முறை அதிக மீள்திறனோடும் எதிர்காலத்திற்கு ஆயத்தமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த பரந்த அளவிலான மூன்று கோட்பாடுகளை டாக்டர் விவியன் யோசனையாக முன்வைத்தார்.
பல தரப்பு ஏற்பாட்டு முறையைப் பலப்படுத்துவதற்கான கடப்பாட்டை உறுப்புநாடுகள் மறுவுறுதிப்படுத்த வேண்டும்;
பல தரப்பு ஏற்பாட்டு முறைக்குள் இடம்பெறக்கூடிய பன்மய அனுபவங்களையும் முறைகளையும் கோட்பாடுகளையும் யோசனைகளையும் மதித்து நாடுகள் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்;
இயந்திர மனிதத் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைச் சமாளிக்க உலகம் ஆயத்தமாக வேண்டும்;
அந்தத் தொழில்நுட்பம் மூலம் எல்லாருக்கும் நியாயமான நன்மை கிடைப்பதை உலகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.