ஓய்வு, மறுவேலைவாய்ப்பு வயதை உயர்த்த மூத்த ஊழியர்கள் விருப்பம்

ஓய்வு, மறுவேலைவாய்ப்பு வயதை உயர்த்த மூத்த ஊழியர்கள் விருப்பம்

2 mins read
fa162526-0f73-48c3-b332-e031d63fe696
முதலாளி திரு தீபக்குடன் திரு ரஃபி (இடது). - படம்: அனுஷா செல்வமணி
multi-img1 of 3
Google News Preferred Icon

மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் சிங்கப்பூரில் மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்தையும் வேலைத்தகுதியையும் ஆராய்வது மிக முக்கியமான ஒன்று.

இது குறித்து மக்கள் செயல் கட்சி மூத்தோர் குழுவும், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் மாதர், குடும்ப அமைப்பும் கைகோத்து நடத்திய ஆய்வில், பெரும்பாலான மூத்த ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதையும் மறுவேலைவாய்ப்பு வயதையும் உயர்த்துவதை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் அமாரா விடுதியில் இடம்பெற்ற அனைத்துலக முதியோர் தினக் கொண்டாட்டத்தில் இத்தகவல் பகிரப்பட்டது. மசெக மூத்தோர் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மூத்த குடிமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மசெக மூத்தோர் குழுத் தலைவரான டாக்டர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான், “மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் சூழலில், நம் அரசாங்கம் மூத்தோருக்காகப் பல திட்டங்களை கொண்டுசேர்த்து வருகிறது.

“மூப்படைந்தாலும் நம்மில் பல மூத்தோர் இன்னும் வேலை செய்து நம் நாட்டிற்காக பங்களிக்க விரும்புகின்றனர். ஆய்வு மூலம் அவர்களின் விருப்பத்தை நான் அறிந்தேன். இதனால் நிறுவனங்களும் மூத்த ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேவைகளுக்கேற்றவாறு மாற்றங்களை அறிமுகப்படுத்துவது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி,” என்று சொன்னார்.

மூத்தோர் தொடர்ந்து வேலை செய்வதற்காக விருப்பம் தெரிவித்தாலும் அவர்களில் சிலர் வயது பாகுபாடு, நீக்குப்போக்கற்ற வேலை நேரம் போன்ற காரணங்களால் ஓய்வுக்காலத்தைத் தாண்டியும் வேலை செய்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இதனால் அவர்களின் முதலாளிகள் தொழில் முன்னேற்றம் மற்றும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை மூத்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

மூத்த ஊழியர்கள் சந்திக்கும் இன்னல்களைச் சமாளிக்க தங்களின் நிறுவனத்தில் நியாயமான வேலை நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்பதை 12 பெருநிறுவனங்கள் உறுதிபூண்டன. இந்த மாற்றம் ஏறத்தாழ 4,000 மூத்த ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அவர்களில் ஒருவரான திரு தீபக் ஆனந்தனி ராதா, எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

தமது நிறுவனத்தில் பணியாற்றும் கிட்டத்தட்ட 180 ஊழியர்களில், 25 விழுக்காட்டினர் மூத்த ஊழியர்கள் எனக் குறிப்பிட்ட அவர், “மூத்த ஊழியர்கள் என் நிறுவனத்திற்கு ஒரு சொத்து. அவர்களின் அனுபவமும் அறிவும் மட்டற்றவை. அவர்களை நன்கு பேணுவதே என் பொறுப்பு. அனுபவத்துக்கேற்ற வேலைவாய்ப்பு வழங்குவது, நீக்குப்போக்கான வேலை நேரம் போன்றவற்றின் மூலம் அவர்களைத் தக்கவைத்துள்ளேன்,” என்று சொன்னார்.

ராதா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிகிறார் திரு ஷேக் முகம்மது ரஃபி, 66.

இந்த வயதிலும் ஓய்வுபெறாமல் முழு நேரப் பணியில் ஈடுபட்டு வரும் அவர், “வேலைக்குச் செல்வதால் என்னால் உற்சாகமாக இருக்க முடிகிறது. நிறுவனத்தின் கிடங்கில் கிட்டத்தட்ட 80 ஊழியர்களுக்கு நான் மேற்பார்வையாளராக இருக்கிறேன். நிறுவனமும் என்னைப் போன்ற ஊழியர்களுக்கு வயதுக்கு ஏற்ற வேலை என்பது போன்ற நீக்குப்போக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. கடைசி வரை நான் வேலை செய்துகொண்டே இருப்பேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்