சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழையிலை விருந்துபடைத்து மகிழ்ந்தன இந்து அறக்கட்டளை வாரியமும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையமும்.
செப்டம்பர் 24ஆம் தேதி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் உள்ள பிஜிபி மண்டபத்தில் படைக்கப்பட்ட இந்தப் புரட்டாசி சிறப்பு விருந்தைக் கிட்டத்தட்ட 2,000 பேர் உண்டு மகிழ்ந்தனர்.
இந்த நாட்டுக்காக கட்டடம் கட்டுவதிலிருந்து, சாலை போடுவது, வீட்டுவேலை செய்வது, உணவங்களில் உணவு பரிமாறுவது என்று பல்வேறு வேலைகளையும் நாள்தோறும் செய்யும் ஊழியர்களுக்கும் ஒருநாளாவது உட்காரவைத்து விருந்து படைக்கும் நோக்கத்தில் இந்த ‘புரட்டாசி விருந்து’ ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார் ஏற்பாட்டாளரான இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழுத் தலைவர் சுசீலா கணேசன்.
சமையல், அலங்காரம், பரிமாறுதல் என அனைத்துப் பணிகளையும் பல்வேறு கோவில்கள், குழுக்களைச் சேர்ந்த ஏறக்குறைய தொண்டூழியர்கள் 80 பேர் மேற்கொண்டனர்.
“ஊரில் புரட்டாசி மாத வழிபாடு செய்வது வழக்கம். பணியிடத்தில், முதலாளி இந்த விருந்து பற்றிச் சொன்னார். நான் எனக்குத் தெரிந்தவர்களுக்குச் சொன்னேன்,” என்றார் தோழி அன்னியமாளுடன் விருந்துண்டு களித்த 50 வயது புனியம்மாள்.
கட்டடப் பணியாளர் கண்ணன் சமூக ஊடகம் மூலம் விருந்து பற்றி அறிந்து வந்திருந்தார்.
‘திருமுறை’க் குழு தொண்டூழியர்களான 25 வயது தாதி தேன்மதி கணேசன், முழுநேரத் தேசிய சேவையாளரான 21 வயது சம்பத்குமார் நவீன்குமார், 23 வயது சரண்யா பன்னீர்செல்வம் மூவரும் இதுபோன்ற பணிகள் மனத்துக்கு நிறைவளிப்பதாகக் கூறினார்.
பொறியாளரும் கேலாங் ஈஸ்ட் சிவன் கோவில் தொண்டூழியருமான அருள்வீர குமாரசாமி கேசவன், 40, சொந்த ஊரில் புரட்டாசியை விமரிசையாகக் கொண்டாடுபவர். 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியாக வசித்து வரும் அவருக்கு இந்த விருந்து அந்தக் கொண்டாட்ட உணர்வைக் கொண்டு வந்தது.
“விடுமுறை நாளை மக்கள் பணிக்காகச் செலவிடுவதைவிடச் சிறப்பானது வேறில்லை,” என்றார் வள்ளலார் குழுத் தொண்டூழியர் ரவிக்குமார் துரைவடிவேலு.
“பொதுவாக அனைத்து இந்துக் கோவில்களிலும் புரட்டாசி அன்னதான நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெறும். ஊழியர் பலருக்கு ஞாயிறுதான் விடுமுறை. அதனைக் கருத்தில்கொண்டுதான் ஞாயிறன்று விருந்தை ஏற்பாடு செய்தோம்,” என்றார் திருவாட்டி சுசீலா கணேசன்.
“கோவில் விழாக்கள், தீமிதி உள்ளிட்ட அனைத்து பெருங்கொண்டாட்டங்களும் இவர்களது பங்கு இல்லாமல் நடைபெறுவதில்லை. இவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவே இவ்விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்த விருந்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.