சீனாவில் உள்ளவர்களுக்கு சட்டவிரோத இணையத்தள சூதாட்ட சேவை வழங்கிய ஆடவர் மில்லியன் கணக்கில் அதன்மூலம் பணம் ஈட்டியதாக நம்பப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பாக தேடப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது.
வாங் பிங்காங் எனப் பெயர் கொண்ட இவர் இதற்கென தமது 23வது வயதில் 2012ஆம் ஆண்டு ஒரு குழுமத்தை ஏற்படுத்தினார் என்று கூறப்படுகிகிறது. சீனாவின் ஆன்சி மாநிலத்திலிருந்து வந்த இவர், இரண்டே ஆண்டுகளில் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டியதாக நம்பப்படுகிறது.
இதற்காக இவர் ஹோங்லி என்ற அனைத்துலக சூதாட்ட இணையத்தளத்தை பிலிப்பீன்ஸ், கம்போடியா நாடுகளில் உருவாக்கி நடத்தி வந்தார். மாண்டரின் மொழியில் ஹோங்லி என்றால் பெரும் லாபம் எனப் பொருள்படும்.
வாங்குக்கு தற்பொழுது வயது 34. இவர் தங்ளினில் உள்ள ரோச்சாலி டிரைவில் நல்ல, வசதியான பங்களா வீட்டில் வசித்து வந்துள்ளார். இதை அவர் மனைவி என்று நம்பப்படும் வாங் லியுன் என்பவருடன் சேர்ந்து வாடகைக்கு எடுத்துள்ளது சிங்கப்பூர் காவல்துறையினர் 10 வெளிநாட்டவரை கைது செய்தபோது தெரியவந்தது.
அவருடைய குடும்பத்தாரும் இல்லப் பணிப்பெண்ணும் இன்னும் அந்த பங்களா வீட்டில்தான் வசிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை அந்த பங்களா வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் வீட்டின் கம்பி நுழைவாயில் திறந்திருந்தாகவும் அங்கு இரண்டு கார்கள், டொயோட்டா அல்ஃபார்ட், ரோல்ஸ் ராய்ஸ் வீட்டு முகப்பில் தென்பட்டதாகவும் அறியப்படுகிறது.

