சிங்கப்பூரின் மரண விசாரணை அதிகாரி, 46 வயது பெண் மரணத்திற்கு கொவிட்-19 தடுப்பூசி காரணமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
திருவாட்டி லியோங் ஜெங் ஃபன் தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்காவது நாளில் மரணமடைந்தார்.
அவருக்கு ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னாட்டி எம்ஆர்என்ஏ தடுப்பூசி போடப்பட்டது.
அவரது மரணம் குறித்த விசாரணையில் தடுப்பூசிக்கும் அவரது மரணத்திற்கும் தொடர்பில்லை என்று மரண விசாரணை அதிகாரியான ஆடம் நகோடா தெரிவித்தார்.
வங்கியில் காசாளராக பணியாற்றி வந்த திருவாட்டி லியோங், பெற்றோருடன் வசித்து வந்தார்.
2021 டிசம்பர் 26ஆம் தேதி டெக் கீ சமூக நிலையத்திற்குச் சென்ற அவர், 3வது கூடுதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அவர், வீடு திரும்புவதற்கு முன்பு கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டார்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பாரமாக இருப்பதுபோல உணர்வதாக தனது சகோதரிக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதன் பிறகு லியோங் தரையில் படுத்திருப்பதை அவரது தந்தை பார்த்தார். ஆனால் லியோங்கை அவர் எழுப்பவில்லை.
பிற்பகல் 2.30 மணியளவில் தடுப்பூசி போட்ட பிறகு லியோங்குக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி அவரது சகோதரி குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், லியோங் மூச்சுவிடவில்லை என்பதை அறிந்தனர். அவரது இதயத் துடிப்பை மீட்கச் செய்யும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. செங்காங் பொது மருத்துவமனை சென்றடையும் வரை சிகிச்சை தொடர்ந்தது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பின்னர் தெரிய வந்தது. மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் அவர் கண்விழிக்கவில்லை. குடுபத்தினருடன் நடந்த பல மணி நேர ஆலோசனைக்குப் பிறகு லியோங்கை உயிர்ப்பிக்க வைக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2021 டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை 2.26 மணியளவில் லியோங் காலமானார்.
மரணத்திற்கான காரணம் தெரியாததால் இந்தச் சம்பவத்தை மருத்துவமனை காவல்துறைக்குத் தெரிவித்தது.
பிரேதப் பரிசோதனையில் லியோங்குக்கு இருந்த இதய நோய் (ischaemic heart disease) மரணத்தை ஏற்படுத்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. லியோங்குக்கு தீவிர இதய நோயுடன் ரத்தக் கசிவு இருந்ததாக பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மரண விசாரணையில் தடுப்பூசிக்கும் லியோங்கின் மரணத்திற்கும் தொடர்பிருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்று சகோதரி குறை கூறியிருந்தார்.