குற்றச்செயல் தடுப்பு, மறுவாழ்வு, மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் தேசிய குழு (என்சிபிஆர்) புதன்கிழமை இளையர் பற்றிய கலந்துரையாடல் கருத்தரங்கில் 20 பரிந்துரைகளை முன்வைத்தது.
‘மாற்றங்களுக்கு இடையே இளைஞர்கள் முக்கியம்’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு கருத்தரங்கம் நடந்தது.
அதில் 600க்கும் மேற்பட்ட பள்ளித் தலைவர்கள், மாணவர்களின் கட்டொழுங்கிற்குப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள், சமூக ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல் இப்ராகிம், திரு சுவாவுடன் குழு விவாதிப்புகளில் பங்கெடுத்தார்.
சிங்கப்பூரில் கடந்த 2018 முதல் 2021 வரை மானபங்கம், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட இளையர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அதைக் கருத்தில் கொண்டே பரிந்துரைகள் இடம்பெற்று இருப்பதாக என்சிபிஆர் அமைப்பு தெரிவித்தது.
பரிந்துரைகளின்படி இளையரிடையே பாலியல் தொடர்பான குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான பயிற்சிகளைப் பள்ளி ஆலோசகர்கள் பெறுவார்கள்.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், உயர்கல்வி நிலையங்களில் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி சிங்கப்பூர் காவல்துறை உரை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும்.
பள்ளிக்கூட சமூக ஆலோசகர்களில் பாதிப்பேருக்கு 2024க்குள் பயிற்சி அளிப்பதும் இதர பாதிப்பேருக்கு 2025க்குள் பயிற்சி அளிப்பதும் நோக்கம் என்று திரு சுவா குறிப்பிட்டார்.
இளையரிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கத்திலும் பரிந்துரைகள் இடம்பெற்று இருக்கின்றன.