அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவியாக சுமார் 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு டிசம்பரில் கூடுதலாக $200 வரை கிடைக்கும். அதோடு, ஒவ்வொரு குடியுரிமைக் குடும்பமும் கூடுதலாக $200 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டில் பெறும்.
கூடிவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் வகையில் இந்தக் கூடுதல் உதவிகள் கிடைக்க இருக்கின்றன.
குடியுரிமைக் குடும்பங்கள் அனைத்திற்கும் உதவுவதற்காக $1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவின ஆதரவுத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக இவை கிடைக்கும்.
குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு அதிக உதவி வழங்கப்படும். இவை எல்லாம் 2023 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள உதவித் திட்டங்களுக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்.
இந்த ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தில் கூடுதலாக $800 மில்லியன் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதையும் சேர்த்து உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை $10 பில்லியனுக்கும் அதிகமாகி இருக்கிறது.
டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள உத்தரவாதத் தொகுப்புத் திட்ட உதவித் தொகையுடன் கூடுதல் உதவிகளும் சேர்த்து வழங்கப்படும்.
ஆகையால் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் டிசம்பரில் $800 வரை ரொக்கம் பெறுவர்.
இதனுடன் ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டில் கிடைக்கும் சிடிசி பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $500 ஆகிறது.
துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தப் புதிய ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தண்ணீர்க் கட்டண உயர்வையும் சமாளிக்க ஒவ்வொரு காலாண்டுக்கும் $20 யு-சேவ் கழிவுகள் வழங்கப்படும்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஆண்டுக்கு $80 என்ற அடிப்படையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 950,000 இல்லங்களுக்கு $160 கட்டணக் கழிவு கிடைக்கும்.
அத்தனை குடியிருப்புகளுக்கும் அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் கழிவும் கிடைக்கும்.
அண்மையில் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்விளைவாக ஒத்திவைக்கப்பட்ட 15.6% கட்டண உயர்வு மாற்றத்தைச் சரிசெய்ய கூடுதல் தள்ளுபடி தொகையாக $300 மில்லியன் 2024ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
$1,600க்கும் குறைவான மொத்த குடும்ப வருமானம் உள்ள சிங்கப்பூர்வாசி குடும்பங்களுக்கு $50 பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் இந்த ஆண்டு இறுதியில் இருந்து வழங்கப்படவுள்ளன.
புதிய ஆதரவுத் திட்டம் பற்றி விளக்கிய துணைப் பிரதமர், ஜிஎஸ்டி உயர்வு என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் திட்டமிடப்படாத இதர சில அம்சங்களும் தலைதூக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அண்மைய கட்டண உயர்வுகள், நிச்சயமில்லாத பொருளியல் நிலவரங்கள், எரிசக்தி, உணவுப்பொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய இடையூறுகள், உலக சூழ்நிலை நிச்சயமில்லாமல் இருப்பது ஆகியவை அவற்றில் அடங்கும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
வருமான அதிகரிப்பை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய துணைப் பிரதமர், இந்த ஆண்டில் வருமான அதிகரிப்பு மிதமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
சம்பள உயர்வைப் பொறுத்தவரை முதலாளிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள் என்பதே அதற்குக் காரணம்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கைப் பாதையில் அவர்களுக்கு ஒவ்வாரு கட்டத்திலும் கைகொடுத்து உதவ அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று துணைப் பிரதமர் உறுதி தெரிவித்தார்.
நிச்சயமில்லாத இப்போதைய காலகட்டத்தில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டிருக்கிறது என்று கூறிய திரு வோங், இந்தப் புதிய ஆதரவுத் திட்டத்திற்காக அரசாங்கம் நாட்டின் இருப்பில் கைவைக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங் அண்மையில் தேசிய நாள் பேரணி உரையில் குறிப்பிட்ட ஒரு செய்தியைத் துணைப் பிரதமர் சுட்டினார்.
சிங்கப்பூரர்களுக்கு இன்னும் சிறந்த ஆதரவை அளிக்க என்ன செய்ய முடியும் என்பது பற்றி நிதி அமைச்சு ஆராய்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்து இருந்தார்.