சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள நீதியரசர் புகழேந்தி சிறப்புரை ஆற்றவிருக்கிறார். அவர் ‘சிறுகதையைப் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.
அதற்கு முன்னதாக நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களைத் தனித்துவமான நோக்கில் பதிவு செய்திருக்கும் எழுத்தாளர் கணேஷ் பாபுவின் ‘வெயிலின் கூட்டாளிகள்’ சிறுகதைத் தொகுப்பின் கலந்துரையாடல் இடம்பெற இருக்கிறது.
கவிஞர் திரு அஷ்ரப் நூலின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் கதைக்களம் நடைபெறவிருக்கிறது.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன. செல்வன் சுமுகன் கபிலன் நெறியாளராக செயல்படுவார்.