விரைவுச்சாலையில் சாக்கடைக்குள் தள்ளிவிடப்பட்ட ஓட்டுநர்

விரைவுச்சாலையில் சாக்கடைக்குள் தள்ளிவிடப்பட்ட ஓட்டுநர்

2 mins read
f45a268a-ab45-4ceb-9f85-d9d57da4d90d
சிட்டிகேப் டாக்சி ஓட்டுநர் திரு ஆலன் வோங்கை வேண்டுமென்றே சாலைத் தடுப்புக்குப் பின்னாலிருந்த சாக்கடைக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.  - படம்: ஸ்டோம்ப்

சிட்டிகேப் டாக்சி ஓட்டுநர் மற்றோர் ஓட்டுநரை சாலைத் தடுப்புக்குப் பின்னாலிருந்த சாக்கடைக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை தீவு விரைவுச்சாலையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தைக் காட்டும் 20 விநாடி காணொளி “ஸ்டோம்ப்” வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

டாக்சி ஓட்டுநர், கதவு திறந்த நிலையில் ஓட்டிச்செல்ல முயல்வதும், ஓர் ஆடவர் அவரைத் தடுப்பதும் காணொளியில் தெரிகிறது. டாக்சி ஓட்டுநர் டாக்சியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியபோது ஆடவர் தள்ளிவிடப்பட்டார்.

தள்ளிவிடப்பட்ட தனியார் வாகன ஓட்டுநர் ஆலன் வோங், காலை 5 மணியளவில் தனது வாகனத்தை ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது, தனக்கு முன்னாலிருந்த சிட்டிகேப் டாக்சி பிரேக் போட்டதால், அதன்மீது மோதியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

இருவரும் விவரங்களைப் பரிமாறிக்கொள்ள தனது வாகனத்திலிருந்து இறங்கியதாக 59 வயது திரு வோங் தெரிவித்தார். ஆனால், டாக்சியில் இருந்த பயணிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்டபோது, டாக்சி ஓட்டுநர் ஓட்டிச்செல்ல முயன்றதாக அவர் சொன்னார். அப்போது நடந்த கைகலப்பில், இரண்டு மீட்டர் ஆழமான சாக்கடைக்குள் அவர் தள்ளிவிடப்பட்டார்.

இதுபற்றி புகார் செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

இந்நிலையில், டாக்சி ஓட்டுநர் விமான நிலையத்திற்குப் பயணியை அழைத்துச் சென்று கொண்டிருந்ததாகவும், விவரங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகும் தனியார் வாகன ஓட்டுநர் அவரைக் கிளம்பவிடாமல் தடுத்துக்கொண்டே இருந்ததாகவும் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனப் பேச்சாளர் திருவாட்டி கிரேஸ் வூ தெரிவித்தார்.

டாக்சி ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்