வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் அக்டோபர் மாதம் யு-சேவ், சேவைப் பராமரிப்பு கட்டண தள்ளுபடிகளைப் பெறும்.
ஜிஎஸ்டி வரி பற்றுச்சீட்டுத் திட்டம், உத்தரவாதத் தொகுப்பு உதவித் திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அந்தக் குடும்பங்களுக்கு இந்த உதவி கிடைக்கும்.
நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
கட்டணத் தள்ளுபடிகள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு முறை கொடுக்கப்படுகின்றன.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பதும் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க உதவுவதும் இந்தத் தள்ளுபடிகளின் நோக்கம்.
நிதி ஆண்டு 2023ல் தகுதி பெறக்கூடிய குடும்பங்கள் வழக்கமாகப் பெறும் யு-சேவ் தள்ளுபடிகளைப் போல இரண்டு மடங்கு தள்ளுபடிகளைப் பெறும்.
வீவக ஓரறை அல்லது ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களைப் பொறுத்தவரை அவை சராசரியாக எட்டு முதல் 10 மாத காலத்திற்குப் பயனீட்டுக் கட்டணம் எதையும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
வீவக மூவறை, நான்கறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களைப் பொறுத்தவரை சுமார் நான்கு முதல் ஆறுமாத காலத்திற்குக் கட்டணங்களைச் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை $1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவு ஆதரவு தொகுப்பு உதவித் திட்டம் பற்றி அறிவித்தார்.
அதன்படி, சிங்கப்பூர் குடும்பங்கள் அனைத்திற்கும் உதவிகள் கிடைக்கும். குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்கள் அதிக உதவி பெறும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரை ஒவ்வொரு காலாண்டிற்கும் கூடுதலாக $20 யு-சேவ் தள்ளுபடி கிடைக்கும்.
அடுத்த ஆண்டும் 2025ஆம் ஆண்டும் இடம்பெற உள்ள கரிம வரி அதிகரிப்பு, தண்ணீர் கட்டண உயர்வு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க உதவுவதற்காக இந்தத் தள்ளுபடிகள் கொடுக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
எரிவாயு, மின்சாரக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களில் கூடும் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தகுதி உள்ள குடும்பங்கள், கூடுதலாக அரை மாத சேவைப் பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியை அடுத்த ஆண்டு ஜனவரியில் பெறும் என்று அமைச்சு தெரிவித்தது.