இயற்கை, தோட்டக்கலை பிரியர்கள் சென்று வருவதற்கான புதியதோர் இடம் திறக்கப்பட்டுள்ளது. மலர்களைக் கருப்பொருளாகக் கொண்ட 11 மாடிக் கடைத்தொகுதியான ஃபார் ஈஸ்ட் ஃபுளோரா சென்டர் கிளமெண்டியில் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துக்குப் பக்கத்தில் அமைந்துள்ள அக்கட்டடம், 1,000 வகையான மலர்களையும் 500க்கும் அதிகமான செடிகளையும் விற்கிறது. அவற்றுடன், தோட்டவியல் பொருள்களும் வீட்டு அலங்காரப் பொருள்களும் அங்கு விற்கப்படுகின்றன.
அங்குள்ள குளிர் கிடங்கில் புத்தம் புதிய மலர்கள், பழங்கள், காய்கறிகள் மொத்த விற்பனை விலையில் விற்கப்படுகின்றன.
கட்டடத்தின் முகப்புப் பகுதி பச்சை பசுமையுடன் காட்சியளிக்கிறது. கூரைக்குமேல் இருக்கும் தோட்டம், பெரிய அளவிலான செடி வகைகளையும் உண்ணக்கூடியவற்றையும் விற்கிறது. பயிலரங்குகளை நடத்துவதற்கான அரங்கமும் 80 பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கான உணவகமும் கடைத்தொகுதியில் அமைந்துள்ளன.
வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட அக்கட்டடம், ஃபார் ஈஸ்ட் ஃபுளோராவின் தலைமையகமாகவும் செயல்படும். அந்நிறுவனத்தின் அலுவலகம், அக்கட்டடத்தில் மூன்று தளங்களை எடுத்துக்கொள்கிறது.
தாம்சன், குவீன்ஸ்வே, பிடோக் உள்ளிட்ட இடங்களில் ஃபார் ஈஸ்ட் ஃபுளோராவிடம் ஏற்கெனவே செடி, கொடி, மலர்களை வளர்க்கும் ஆறு நாற்றங்கால்கள் உள்ளன.

