ஹவ்காங்கில் உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டில் வெள்ளிக்கிழமையன்று தீ மூண்டது. சுமார் 50 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஹவ்காங் ஸ்திரீட் 32ல் உள்ள வீவக புளோக் 376Bல் தீ மூண்டதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் வந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு குடிமைத் தற்காப்புப் படை இவ்வாறு பதிலளித்தது.
புளோக்கின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பிடித்தது.
இச்சம்பவம் பதிவான காணொளியை இணையத்தில் பலர் பகிர்ந்துகொண்டனர். குறைந்தது மூன்று வழிப்போக்கர்கள் புளோக்கிற்கு அருகே நின்று பாதிக்கப்பட்ட வீட்டின் சன்னலிலிருந்து புகை வருவதைப் பார்த்து காணொளியில் தெரிந்தது.
தீ அணைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
புகையை நுகர்ந்த ஒருவர் சோதிக்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. ஆனால், அந்நபர் மருத்துவமனைக்குக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

