சிங்கப்பூரில் தங்கத்தின் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு சரிந்துள்ளது.
கடந்த புதன்கிழமை வரை ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 81.40 வெள்ளிக்கு விற்கப்பட்ட நிலையில், அது கடந்த வெள்ளிக்கிழமையன்று 78.60 ஆகச் சரிந்து, திங்கட்கிழமை 78.30 வெள்ளிக்கு விற்கப்பட்டது.
தங்கம் என்பது தமிழ்ச் சமூக மக்களின் விருப்பத்திற்குரிய ஆபரணம் என்பதை தாண்டி, முதலீட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
வரவிருக்கும் விழாக்காலத்தையொட்டி பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டலாம் என்ற நிலையில், விலை இறங்கியிருப்பதால் வணிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அணிமணி பொற்சாலை மேற்பார்வையாளர் அருணாசலம்,“ இதேபோல் விலை குறைந்தால் தீபாவளிக்குள் நிறைய மக்கள் தங்கம் வாங்குவார்கள்” என்றார்.
ஜிஆர்டி நகைக்கடை காசாளர் பெருமாள் கண்ணன், 36, கூறுகையில், “தங்கத்தின் விலை குறைந்து வருவதால் கடந்த வார இறுதி நாள்களில் மக்கள் வரத்து அதிகம் இருந்தது. விலை மேலும் குறைந்தால் மக்கள் வருகை இன்னும் கூடலாம்,” என்று சொன்னார்.
“கடந்த வாரம் வரை 80 வெள்ளிக்கும் மேல் இருந்த விலை வெள்ளிக்கிழமை குறைந்ததோடு, தொடர்ந்து சீராகக் குறைந்து வருவதையும் காண முடிகிறது. இது மக்களுக்கு நன்மைதரும் என்று நினைக்கிறேன்,” என்றார் ஜோயலுக்காஸ் நகைக்கடை வாடிக்கையாளர் சேவை அதிகாரி ரூபிணி இளங்கோவன், 27.