இளம் தலைவர்கள் கருத்துகளைக் கேட்கும்போது சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் இயூ பெருந்தன்மையுடன் தமது கருத்துகளைத் தெரிவித்ததோடு, இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அவர்களிடமே அவர் விட்டுவிடுவார் என்றும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து உள்ளார்.
புதிய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கான உருமாற்றத்தை மிகவும் அறிவார்ந்த முறையில் திரு லீ கையாண்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ குறிப்பிட்டார்.
“நல்ல நோக்கங்கள் கொண்ட சிறந்தவரைக் கண்டறிவது, அவரைக் கொண்டு வந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிப்பது, அனுபவம் பெற்ற பின்னர் பொறுப்பை அவரிடம் அளிப்பது - இதுதான் திரு லீயின் சிறந்த தலைமைத்துவ மாற்றத் திட்டமாக இருந்தது.
“திரு லீ செய்ததை திரு கோ சோக் டோங் தொடர்ந்தார். தற்போது திரு லீ சியன் லூங்கும் தமக்கான தலைமைத்துவ மாற்றத்தில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானது,” என்று திரு டியோ தெரிவித்தார்.
தற்போதைய நான்காம் தலைமுறைத் (4ஜி) தலைவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசியல் தலைமைத்துவ மாற்றம் நிகழவிருக்கும் வேளையில் சிங்கப்பூருக்கு எப்படிப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை தெரிந்த தலைவர் தேவைப்படுகிறார் என்று திரு டியோவிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், சிங்கப்பூரின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் வட்டார அளவிலும் உலக அளவிலும் தங்களுக்கு இணையான தலைவர்களுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தொடர்பில் இருந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
அதிகரித்துவரும் உலகின் நிச்சயமற்ற நிலையில் ஆசியாவின் வருங்காலம் குறித்து நடத்தப்பட்ட உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு திரு டியோ பேசினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகிய செய்தித்தாள்கள் இணைந்து ரிட்ஸ் கார்ல்ட்டன் ஹோட்டலில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இம்மாநாட்டை நடத்துகின்றன.
‘சிங்கப்பூரும் ஆசியாவும் சோதனையான காலகட்டத்தை நெருங்கும் வேளையில் உலகம் பற்றிய லீ குவான் யூவின் கண்ணோட்டத்தை நினைவுகூர்தல்’ என்னும் தலைப்பில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
அமரர் லீ குவான் இயூவின் நூற்றாண்டு விழாவை சிங்கப்பூர் கொண்டாடும் வேளையில் மாநாட்டுக்கு இந்தத் தலைப்புச் சூட்டப்பட்டு உள்ளது.
உள்ளூரையும் அனைத்துலகத்தையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தனித்துவப் பேச்சாளர்களும் ஏறக்குறைய 300 சிந்தனையாளர்கள் மற்றும் அரசாங்க, தனியார் துறைகளின் பிரதிநிதிகளும் இந்த இரு நாள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.