சிங்கப்பூரில் மேலும் ஒரு கொவிட்-19 தொற்று அலை ஏற்பட்டு உள்ளது. வரும் வாரங்களில் மேலும் பலர் பாதிக்கப்படலாம் என்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை இவ்வாறு எச்சரித்துள்ளார். இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகள் எதையும் விதிப்பதற்கான திட்டங்கள் இல்லை என்றார் அவர்.
மனநலக் கழகத்தில் மறுவாழ்வு நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து பேசிய அவர், அன்றாட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முன் சுமார் 1,000 பேராக இருந்தது. அது கடந்த இரண்டு வாரங்களில் 2,000 ஆகக் கூடிவிட்டது என்றார்.
இப்போது இரண்டு வகை உருமாறிய கிருமிகள் மனிதர்களைத் தொற்றுகின்றன. இஜி.5, ஹெச்கே.3 என்ற அந்தக் கிருமிகள் எக்ஸ்பிபி ஓமிக்ரான் கிருமியில் இருந்து தோன்றியவை.
அன்றாடம் பாதிக்கப்படுவோரில் 75 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் அந்த இரு கிருமிகளால் பாதிக்கப்படுவோராக இருக்கிறார்கள் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
இந்தத் தொற்றை, அப்போதைக்கு அப்போது ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்றாகவே நாம் கருதுகிறோம் என்றார் அவர். இதுவே கொவிட்-19 தொடர்பிலான நம்முடைய உத்தி என்றார் அவர்.
இருந்தாலும் புதிய வகை உருமாறிய கிருமிகள் காரணமாக முன்பு ஏற்பட்ட அளவுக்கு கடுமையான பாதிப்புகள் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
இந்தப் புதிய வகை கிருமிகளால் பாதிக்கப்படும் பட்சத்தில் இப்போதைய தடுப்பூசிகளே தொடர்ந்து நமக்குப் பாதுகாப்பை கொடுக்கும். கடுமையான பாதிப்புகளைத் தவிர்த்துவிடும் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார்.
இருந்தாலும் கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்புகளை நாம் குறைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.
வரும் வாரங்களில் அதிகம் பேர் பாதிக்கப்படலாம். மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கைக் கூடலாம். அதனால் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நோயுற்ற முதியவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
கூட்டமான இடங்களுக்குப் போகும்போது முக்கவசங்களை அணிய வேண்டும். அவ்வப்போது போட வேண்டிய தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார்.
‘‘நான் ஏற்கெனவே கூறியதைப் போல கொவிட்-19 தலைகாட்டியது முதல் அதன் வீரியம் குறையவில்லை. நம்முடைய நோய்த் தடுப்பு ஆற்றல்தான் அதிகரித்து இருக்கிறது.
‘‘இதற்கு தடுப்பூசிகளும் பாதுகாப்பான முறையில் குணமடைந்ததும் முக்கிய காரணங்களாக இருந்து வந்துள்ளன.
‘‘இருந்தாலும் எல்லா பாதுகாப்பு அம்சங்களைப் போலவே காலவோட்டத்தில் இவையும் மங்கிவிடும்.
‘‘இதனால்தான் அமைச்சு நம்முடைய பல்வேறு தடுப்பூசி நிலையங்களிலும் இலவசமாகத் தொடர்ந்து கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டு வருகிறது,’’ என்று சுகாதார அமைச்சர் கூறினார்.