ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதியைப் பெற அடுத்த ஆண்டு முதல் மேலும் பல குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான மொத்த மாதாந்திர தனிநபர் குடும்ப வருமான வரம்பு $690லிருந்து $750 ஆக உயர்த்தப்படுகிறது.
இது பற்றி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அந்த நிதிக்கு ஆதரவு அளித்து நன்கொடை வழங்குபவர்கள், பங்காளிகள், விநியோகிக்கும் அமைப்புகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு நன்றிகூறும் வகையில் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதையொட்டி வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டத்திற்கான புதிய வருமான வரம்பு ஜனவரி மாதம் நடப்புக்கு வந்தது. அதையொட்டி இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதிக்கான தனிநபர் மாத வருமான வரம்பு இதற்கு முன் 2020ல் $625லிருந்து $690 ஆக உயர்த்தப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைச்செலவு நிதி என்பது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் ஒரு சமூகத் திட்டமாகும்.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தங்களுடைய பள்ளிக்கூடச் செலவை ஈடுகட்ட இந்த நிதி உதவுகிறது.
அதேவேளையில், பிள்ளைகளின் சமூக, கல்வி மேம்பாட்டிற்கும் இது கைகொடுக்கிறது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய படிப்பு மாணவர்கள் அந்த நிதி மூலம் ஒவ்வொரு மாதமும் முறையே $65, $100, $125 பெறுகிறார்கள்.
அந்த நிதி 2000ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அந்த நிதி மூலம் 210,000க்கும் மேற்பட்ட சிறார்கள், இளையர்களுக்கு $97 மில்லியன் கொடுக்கப்பட்டு உள்ளது.
தோ பாயோவில் உள்ள எஸ்பிஎச் நியூஸ் சென்டரில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் எம்இஎஸ் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் முகம்மது அப்துல் ஜலீல், அந்த நிதிக்கு $500,000 நன்கொடையை வழங்கினார்.

