கார்ப்பேட்டையில் காய்கறிப் பண்ணை

கார்ப்பேட்டையில் காய்கறிப் பண்ணை

2 mins read
38972476-c98f-46c2-bf10-340f0fc8a4ec
கிரீன்ஹுட் செங்குத்துக் காய்கறிப் பண்ணை, ஹவ்காங் ஸ்திரீட் 92ல் உள்ள புளோக் 946ஏ-யின் கூரையில் அமைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஹவ்காங் ஸ்திரீட் 92ல் உள்ள புளோக் 946ஏ-யின் கூரையில் கிரீன்ஹுட் செங்குத்துக் காய்கறிப் பண்ணை அமைந்துள்ளது. அங்கு பல வகை கீரைகள் பயிரிடப்படுகின்றன.

அந்தப் பண்ணை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. சிங்கப்பூரில் இதர பல கூரைப் பண்ணைகள் இருக்கின்றன. என்றாலும் இந்த 1,808 மீட்டர் பரப்புளவு உள்ள பண்ணை கூரையால் மூடப்பட்ட ஒன்று.

இதில் காய்கறிகள் குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பருவநிலையில் வளர்கின்றன. வெளி பருவநிலை எப்படி இருந்தாலும் இவை பாதிக்கப்படமாட்டா. அதேபோல், பூச்சி மருந்து அடிக்க வேண்டிய தேவையும் இராது.

கிரீன்ஹுட் நிறுவனம் ஒரு வர்த்தக நிறுவனம். அது கூரைப் பண்ணையை நடத்துவதற்கான குத்தகையை ஒப்பந்தப் புள்ளி மூலம் மூன்று ஆண்டுகளுக்குமுன் பெற்றது. ஜூன் மாதம் பண்ணை செயல்படத் தொடங்கியது.

பண்ணையில் மேசைமீது உள்ள குழி போன்ற பகுதிகளில் விதைகள் முளைக்க வைக்கப்படுகின்றன. அவை நாற்றங்காலாகச் செயல்படுகின்றன.

பயிர் 5 செ.மீ. உயரம் வளர்ந்ததும் அவை செங்குத்து அடுக்குகளில் நடப்படுகின்றன. அந்த அடுக்குகள் காற்றோட்டத்திற்கான ஓட்டைகளுடன் உள்ளன.

மூன்று வார காலத்திற்குச் சத்துமிக்க தண்ணீர் பாய்ச்சப்பட்டு பிறகு அறுவடை நடக்கிறது.

கிரீன்ஹுட் நிறுவனத்தின் நிறுவனர் கௌரவ் சரஃப், ஜப்பானிய வங்கியில் இயக்குநராக வேலை பார்த்தார். ஆனால் அதை விட்டுவிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நிதித்துறையில் வேலை பார்த்தவர்.

சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு, பல அடுக்குக் கார்ப்பேட்டைகளின் கூரையில் பண்ணையை அமைத்து காய்கறிகளையும் இதர உணவுப் பயிர்களையும் பயிரிட ஏதுவாக 2020ல் ஒன்பது கார்ப்பேட்டை கூரைப் பகுதிகளை ஒப்பந்தப் புள்ளி மூலம் குத்தகைக்குக் கொடுத்தது.

சிங்கப்பூர், தனக்குத் தேவைப்படும் சத்துணவில் 30%ஐ வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உள்ளூரில் உற்பத்தி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதையொட்டி கார்ப் பேட்டைகளின் கூரை இடங்களை நவீன வேளாண்மைப் பண்ணைகளாக ஆக்க அது முடிவு செய்தது.

பொறியியல், நிர்வாகத்துறை பட்டதாரியான திரு கௌரவ், ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்து குத்தகையைப் பெற்றார்.

பண்ணையை அமைக்கும் பணி 2022 அக்டோபரில் தொடங்கியது. உற்பத்தியும் தொடங்கி இருக்கிறது. உணவகங்கள், தனிநபர்கள் போன்ற வாடிக்கையாளர்களைப் பெறுவது அடுத்த வேலை என்று அவர் தெரிவித்தார்.

இணையம் மூலம் காய்கறிகளை விற்கும் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று கீரை, காய்கறிகளை விநியோகிக்கும்.

கிரீன்ஹுட் பண்ணையில் ஒரு சந்தையும் இருக்கிறது. அது ஞாயிற்றுக்கிழமை தோறும் திறந்து இருக்கும். வாடிக்கையாளர்கள் அங்கு சென்று காய்கறிகளை வாங்கலாம்.

விலை $2 முதல் $6 வரை. https://www.greenhood.sg. என்பது கிரீன்ஹுட் இணையத்தள முகவரி.

குறிப்புச் சொற்கள்