சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) புகைமூட்டம் ஏற்பட அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வட்டாரத்தில் மழை பெய்யும் என்பதால், இந்தோனீசியாவில் பரவ இயலாதபடி தீ மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டாரத்தின் பல பகுதிகளிலும் பருவநிலை கண்காணிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தனது அன்றாட ஆலோசனைச் செய்தியில் தெரிவித்தது.
கருமையான மேகம் சூழ்ந்து இருக்கிறது. இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீ எரிவதோ புகை கிளம்புவதோ துணைக்கோளப் படங்கள் மூலம் தெரியவில்லை.
சிங்கப்பூரில் திங்கட்கிழமை பிற்பகலில் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. திங்கட்கிழமை மாலையில் காற்றுத் தூய்மை வழக்கமான நிலையில் இருந்தது.
காற்றுத் தூய்மைக் கேடு அளவு 56 முதல் 73 வரை மிதமான நிலையில் இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதுவே தொடரும் என்று முன்னுரைக்கப்படுவதாக வாரியம் தெரிவித்தது.