இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கையானது புதன்கிழமையன்று 15லிருந்து 66க்கு உயர்ந்தது.
ஆயினும், இவ்வட்டாரத்தில் பெய்யும் மழையால் சிங்கப்பூரில் 24 மணி நேரத்திற்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) மிதமான அளவிலேயே நீடிக்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
24 மணி நேர பிஎஸ்ஐ குறியீடு 58 முதல் 61 என்ற மிதமான அளவிலேயே இருந்ததாகப் புதன்கிழமையன்று வெளியிட்ட அன்றாடப் புகைமூட்ட ஆலோசனைக் குறிப்பில் வாரியம் தெரிவித்திருந்தது.
ஒரு மணிநேரத்திற்கான பிஎம்2.5 குறியீடானது ஒரு கனமீட்டருக்கு 13 முதல் 28 மைக்ரோகிராம் என்ற அளவிலேயே நீடித்தது. 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் சிறிய நுண்துகள்கள் காற்றில் எந்த அளவிற்குக் கலந்துள்ளன என்பதை பிஎம்2.5 குறியீடு குறிக்கும்.
மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், தெற்கு அல்லது மத்திய சுமத்ராவிலிருந்து எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்கான வாய்ப்பு குறைவு என்று வாரியம் தனது ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 24 மணி நேர பிஎஸ்ஐ குறியீடானது, 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி 67 முதல் 123 என ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது.
குறிப்பாக, தீவின் கிழக்குப் பகுதியில் வசிப்போர் புகைமூட்டத்தை எதிர்கொண்டனர். அதனால், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படி வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.