காஸாவில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், சிங்கப்பூரில் சில இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அத்தகைய இடங்களில் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் உட்பட பாதுகாப்பு அமைப்புகள் காஸா நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன. அதிக ஆபத்துள்ளவையாகக் கருதப்படும் இடங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சொன்னார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுக்காவல் அதிகரிக்கப்படும் இடங்களைத் தெரிவிக்க இயலாது என்று கூறிய திரு சண்முகம், மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பல நாடுகள் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நிகழக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யூதக் குடியிருப்புகள், யூத சமயக் கட்டடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல்-காஸா மோதல்களைப் பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் சிங்கப்பூரர்கள் விழிப்புநிலையில் இருக்க வேண்டும் என்று திரு சண்முகம் கேட்டுக்கொண்டார்.
“உலகில் சில குழுக்கள் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிரான புனிதப் போரில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் யூத எதிர்ப்பு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. சிங்கப்பூர் தாக்குதல் நடத்துவதற்கு கவர்ச்சிகரமான இடமாகக் கருதப்படுவதால், அனைவரும் விழிப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டிய தருணம் இது,” என்றார் திரு சண்முகம்.
சிங்கப்பூருக்கு எதிராக தீவிரவாதச் சிந்தனைகளைத் தூண்டிவிடுபவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் சிங்கப்பூர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.