இந்தோனீசியாவின் சுமத்ராவில் தீ மூண்டிருக்கும் இடங்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 126ஆகக் குறைந்துவிட்டது.
இருந்தாலும்கூட இந்த வார முடிவில் சிங்கப்பூரில் புகைமூட்டம் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுமத்ராவின் தென் பகுதியிலும் மத்திய பகுதியிலும் மிதமானது முதல் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்திருந்தது துணைக்கோளப் படங்கள் மூலம் தெரியவந்ததாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம் தனது அன்றாட புகைமூட்ட ஆலோசனை அறிக்கையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் சுற்றிலும் உள்ள வட்டாரத்திலும் இந்த வார முடிவில் வறட்சியான பருவநிலை நிலவும்.
பெரும்பாலும் தெற்கில் இருந்து வலுவான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் சனிக்கிழமைக்கான 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேடு அளவு மிதமானதாக (51-100) இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளது.