சிங்கப்பூரில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் அறியப்படுகிறது.
இருப்பினும் இங்கு மார்பகப் புற்றுநோய்க்குப் பரிசோதனை செய்துகொள்வோர் விகிதம், மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளைவிடக் குறைவு என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர்ப் பெண்கள் 13 பேரில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியம் இருக்கிறது. மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்படுவோரில் பெரும்பாலோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
50 முதல் 69 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர்ப் பெண்களில் 37.6 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த ஈராண்டுகளில் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்துகொண்டுள்ளனர். 2022க்கான தேசிய சுகாதாரக் கருத்தாய்வில் அது தெரியவந்தது.
2019ஆம் ஆண்டில் அந்த விகிதம் 38.7 விழுக்காடாக இருந்தது.
பொதுவாக, மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் ‘மேமோகிராம்’ எனப்படும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வோர் விகிதம் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 2020, 2021ஆம் ஆண்டுகளில், 50 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட 75.9 விழுக்காட்டுப் பெண்கள் இந்தப் பரிசோதனையைச் செய்துகொண்டுள்ளனர்.
அதே காலகட்டத்தில், டென்மார்க், ஃபின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் 50 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பெண்கள் ‘மேமோகிராம்’ பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குடும்பத்தில் யாருக்கும் ஏற்கெனவே மார்பகப் புற்றுநோய் ஏற்படாவிட்டால் தனக்குப் பாதிப்பு இராது என்ற தவறான சிந்தனை பரவலாக நிலவுகிறது. உண்மையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 30 விழுக்காட்டினருக்கு மட்டுமே குடும்பத்தில் இந்த நோய் ஏற்பட்டுள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர்ப் பெண்களில் 96 விழுக்காட்டினருக்கு ‘மேமோகிராம்’ பரிசோதனையின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் பரிசோதனை முடிவு குறித்த அச்சத்தால் அவர்கள் இதைத் தள்ளிப்போடுவதாகக் கூறப்படுகிறது.
மருத்துவத் துறையின் முன்னேற்றத்தால், முதிய பெண்களுக்கும்கூட மார்பகப் புற்றுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலும் என்பதைச் சுட்டிய வல்லுநர்கள் இந்நோயை மரண தண்டனையாகக் கருதக்கூடாது என்று எடுத்துரைத்துள்ளனர்.