என்டியுசி ஃபேர்பிரைஸ் கடைகளில் விற்கப்படும் முட்டைகள் ஒரு வகை பாக்டீரியா கிருமி தொற்று காரணமாக மீட்டுக் கொள்ளப்படுவதாக வாட்ஸ்அப் செயலியில் வெளியான தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது.
அத்தகைய முட்டைகளை வாங்கியோருக்குப் பணத்தை ஃபேர்பிரைஸ் கடை திருப்பித் தருவதாக அந்தச் செய்தி கூறுவதும் பொய் என்று என்டியுசி ஃபேர்பிரைஸ் சனிக்கிழமை ஃபேஸ்புக்கில் விளக்கியது.
“அந்தச் செய்தி உண்மை அல்ல. என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். ஃபேர்பிரைஸ் கடை எதிலும் முட்டைகள் மீட்டுக்கொள்ளப்பட வில்லை,” என்று அது குறிப்பிட்டது.
இதனிடையே. சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பும் என்டியுசியின் ஃபேஸ்புக்கில் செய்தியைப் பகிர்ந்து கொண்டது.
“முட்டைகள் மீட்டுக்கொள்ளப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அப்படி எதுவும் இல்லை,” என்று முகவை தெரிவித்தது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வரும்போது எச்சரிக்கையுடன். விழிப்புடன் செயல்படுமாறு வாடிக்கையாளர்களை என்டியுசி வலியுறுத்தியது.
சொந்த சமூக ஊடகத்தில் அல்லது இணையத்தளத்தில் மட்டுமே அதிகாரபூர்வ செய்திகள், தகவல்கள் அறிவிப்புகள் விடுக்கப்படும் என்றும் அது கூறியது.