பல வகையான பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், அதில் உள்ள பொருள்களைப் பயன்படுத்திய பிறகு கழிக்கப்படும் பொட்டலங்கள், பிளாஸ்டிக் போத்தல், தகர கலன் போன்ற சிப்பக் கழிவுப்பொருள்களை இன்னும் சிறந்த முறையில் கையாளுவதற்காக ஆய்வு ஒன்று நடத்தப்படும்.
அந்த ஆய்வு, ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பற்றி முடிவு செய்யும்.
பயன்படுத்தப்பட்ட தங்களுடைய சிப்பக் கழிவுகளைச் சேகரிக்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் நிறுவனங்களே பொறுப்பு எடுத்துக்கொள்ள அந்தத் திட்டம் வகை செய்யும்.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் சிப்பக் கழிவுகளில் சுமார் 60% பிளாஸ்டிக் பொருள்களாக இருந்தன என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து உள்ளது.
அவற்றில் 30% காகித அட்டைகள். எஞ்சிய 10% உலோகம், கண்ணாடி போன்ற கழிவுகள் என்று அந்த வாரியம் கூறியது.
சிங்கப்பூரில் உருவாகும் கழிவுப்பொருள்கள், செமக்காவ் தீவில் குவிக்கப்படுகின்றன. அங்கு குவிக்கப்படும் குப்பையைக் குறைக்க ஏதுவாக, நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு அணுகுமுறையை (இபிஆர்) வாரியம் நடைமுறைப்படுத்தும்.
அது, முதலில் குளிர்பான பிளாஸ்டிக் போத்தல், தகர கலன்களில் இருந்து 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கும்.
இந்த அணுகுமுறை தொடங்கும்போது 150 மி.லி. முதல் மூன்று லிட்டர் வரைப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களில், தகர கலன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்துவித பானங்களுக்கும் திரும்பக் கிடைக்கக்கூடிய 10 காசு வைப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டி இருக்கும்.
பானத்தைக் குடித்துவிட்டு போத்தலை அதற்கான இடத்தில் திருப்பி ஒப்படைத்து வாடிக்கையாளர்கள் அந்த வைப்புத் தொகையைத் திரும்பிப் பெறலாம்.
இபிஆர் திட்டத்தை இதர வகை பொட்டலக் கழிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நீட்டிப்பது சாத்தியமா என்பது குறித்து வாரியம் ஆராய்ந்து வருகிறது. இபிஆர் ஏற்பாடு காரணமாக பொட்டலக் கழிவுகள் சேகரிப்பும் அவற்றின் மறுபுழக்கமும் அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.
அதோடு, இத்திட்டம் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு ஊக்கமூட்டுவதாகவும் இருக்கும். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டு பொட்டலப் பொருள்களைத் தயாரிப்பார்கள். இதனால் பொட்டலக் கழிவுகள் மிகவும் குறையும்.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு முதல் கட்டாய பொட்டல விவர அறிவிப்பு (எம்பிஆர்) திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்களுடைய பொட்டலங்கள் பற்றிய தகவல்களையும் 3 ஆர் (குறைப்பு, மறுபுழக்கம், மறுசுழற்சி) திட்டங்களைப் பற்றியும் ஆண்டுதோறும் தேசிய சுற்றுப்புற வாரியத்திடம் தெரிவிக்கவேண்டும்.