தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-அமெரிக்கா வலுவான உறவுக்கு புதிய துறை ஒத்துழைப்புகள்

3 mins read
0b24745a-c7c4-4973-b9ea-97d572d326c4
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கண்ணுக்குத் தெரியும் காலம் வரை உலகில் அமெரிக்காவே தொடர்ந்து ஆற்றல்மிக்க தலைமைத்துவப் பங்காற்றும் என்று தெரிவித்தார். - படம்: தகவல், தொடர்பு அமைச்சு 

கண்ணுக்குத் தெரியும் காலம் வரை உலகில் அமெரிக்காவே தொடர்ந்து ஆற்றல்மிக்க தலைமைத்துவப் பங்காற்றும்.

புதிய தொழில்நுட்பங்கள், விண்வெளி ஆய்வு, பசுமை எரிசக்தி போன்ற புதிய துறைகளில் அமெரிக்காவுடன் இரு தரப்பு உறவுகளை சிங்கப்பூர் விரிவுபடுத்தும்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தார்.

திரு வோங் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பயணம் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.

அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட உறவில் தற்காப்பும் பாதுகாப்புமே எப்போதுமே முக்கிய தூண்களாக இருந்து வந்திருக்கின்றன என்பதைச் சுட்டிய திரு வோங், வழி வழியான இந்தத் துறைகளுக்கு அப்பாலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சிங்கப்பூர் விரும்புகிறது என்றார்.

உலகில் புதிதாக தலையெடுக்கின்ற, மிக முக்கியமான தொழில்நுட்பங்கள் தொடர்பில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கின்றன.

விண்வெளி ஆய்வில், பசுமை எரிசக்தித் தீர்வுகளில் மேலும் பலவற்றை எப்படி சாதிக்கலாம் என்பது பற்றி இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன.

பசிபிக் தீவு வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்குக் கூட்டாக தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் தொடர்பில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

உலகம் பல ஆதிக்கச் சக்திகளைக் கொண்ட ஒன்றாக ஆகி வருகிறது. இதனால் சிக்கல் அதிகரிக்கும். இருந்தாலும் அமெரிக்காவே தொடர்ந்து முன்னணியில் திகழும் என்று அவர் கூறினார்.

சீனா தலையெடுக்கிறது. இந்தியா, ஆசியான் நாடுகளும் மேம்பட்டு வருகின்றன.

ஆகையால், சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக மாறும்.

இருந்தாலும்கூட அமெரிக்காவே தொடர்ந்து ஆற்றல்மிக்க பங்காற்றும் என்று திரு வோங் வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஊடகத்திற்கு 30 நிமிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான உத்திபூர்வ நம்பிக்கையை மீண்டும் பலப்படுத்துவது அந்த இரண்டு நாடுகளுக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய திரு வோங், சிங்கப்பூர் இதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து உதவ முடியும் என்றார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நவம்பர் மாதம் ஏபெக் தலைவர்களின் உச்சநிலை மாநாடு நடக்கவிருக்கிறது.

அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்திப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அமெரிக்கா இறங்குமுகமாகி வருகிறது என்று கூறப்படுவதைத் திரு வோங் நிராகரித்துவிட்டார்.

உலகின் எஞ்சிய நாடுகளை விஞ்சி அமெரிக்கா முன்னணியில் நிலைக்குமா என்று கேட்டதற்குப் பதிலளித்த திரு வோங், அதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

கண்ணுக்குத் தெரியும் காலம் வரை அமெரிக்காவே தொடர்ந்து மிக வலுவான தலைமைத்துவ இடத்தில் இருந்து வரும் என்பதே தனது எண்ணமாக இருக்கிறது என்று திரு வோங் கூறினார்.

அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வெவ்வேறான பல துறைகளிலும் மிக அணுக்கமான உறவு இருந்து வருகிறது.

இதை முக்கியமானதாக மதித்து, அங்கீகரித்து, ஆதரவு அளிப்பதற்கு அதுவே காரணம் என்றார் திரு வோங்.

அமெரிக்கப் பயணத்தின்போது அதிபர் பைடன் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து, தேசிய பாதுகாப்பு முதல் பொருளியல் நிதித்துறை வரை பலவற்றையும் பற்றி திரு வோங் பேசினார்.

அந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள வலுவான, பலமுனை ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

காஸா நிலவரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு வோங், குடிமக்களின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை என்றார்.

குறிப்புச் சொற்கள்