லிட்டில் இந்தியாவிலிருந்து கிராஞ்சி வே பகுதியில் உள்ள தங்குவிடுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் திரும்புவதில் சிரமம் இருந்துவந்த நிலையில், தற்போது அவர்களுக்குத் தனியார் பேருந்துச் சேவை இரவு நேரத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுங்கை காடுட் பகுதிக்குச் செல்வதற்கான வசதியையும் வழங்குகிறது ‘லிட்டில் இந்தியா பஸ் செர்விஸ்’ (எல்ஐபிஎஸ்). இதுவரை சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்குச் சென்று வர, இப்பேருந்துச் சேவை இயங்கிவந்தது.
கிராஞ்சி வே, சுங்கை காடுட், கிராஞ்சி லிங்க் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செல்ல விரும்புவோருக்கு அக்டோபர் 8ஆம் தேதி முதல் பேருந்துச் சேவை தொடங்கியது.
கிராஞ்சி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்திலிருந்து தங்களின் தங்குவிடுதிகளுக்குச் செல்வதற்குச் சட்டவிரோத சரக்கு வண்டிச் சேவையை நாடுவதாக அக்டோபர் 2ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
கிராஞ்சி வேயில் அமைந்துள்ள தங்குவிடுதிகளுக்குச் செல்லும் ஒரே பேருந்தான 925M, ஞாயிறு இரவுகளில் 7.40 மணிக்குத் தன் சேவையை முடித்துக்கொள்வதால் இந்நிலை ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
சிங்கப்பூர் பள்ளிப் போக்குவரத்துக் கழகமும் (எஸ்எஸ்டிஏ) சிங்கப்பூர் பள்ளி மற்றும் தனியார் வாடகைப் பேருந்து ஓட்டுநர்கள் கழகமும் இணைந்து ‘எல்ஐபிஎஸ்’ சேவையை நடத்தி வருகின்றன.
வழங்கப்படும் புதிய சேவையில் ஒவ்வொரு பயணத்திற்கும் ஊழியர்கள் $3 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு பேருந்திலும் 45 பேர் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐபிஎஸ் அதன் சேவையை கிராஞ்சி, மண்டாய் பகுதிகளின் ஆறு இடங்களிலிருந்து பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்கிறது. தேக்கா லேன் இடத்திலிருந்து மீண்டும் தங்களின் தங்குவிடுதிகளுக்குத் திரும்பும் பயணிகள் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
முன்னதாக, கிராஞ்சி எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து நிறுத்தும் இடத்தில் சட்டவிரோதமாகத் தங்களின் லாரிகளை ஓட்டுநர்கள் நிறுத்திவைத்து வெளிநாட்டு ஊழியர்களை அவர்களின் தங்குவிடுதிகளில் சேர்க்கக் கட்டணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில், சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவை வழங்குவோருக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.