காப்புறுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதை அடுத்து, இரு முன்னாள் நிதி ஆலோசகர்களுக்கு எதிராக சிங்கப்பூர் நாணய ஆணையம் ஐந்தாண்டு தடை உத்தரவை திங்கட்கிழமையன்று பிறப்பித்தது.
முன்னாள் ‘ஏஐஏ சிங்கப்பூர்’ பிரதிநிதியான பெட்ரிஷா குவெக் புவே யி, முன்னாள் ‘புரோஃபெஷனல் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரி செர்விசஸ்’ பிரதிநிதியான சில்வர் ஹுவாங் சின் டியன் ஆகியோருக்கு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விபத்து ஒன்றில் குவெக் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து ‘மனுலைஃப் சிங்கப்பூர்’ நிறுவனத்திடமிருந்து காப்புறுதித் திட்டம் ஒன்றை குவெக் ஜூலை 2020ல் ஹுவாங்கின் உதவியுடன் வாங்கினார்.
காப்புறுதித் திட்டம் நடப்புக்கு வந்ததை அடுத்து இருவரும் $1,128.57 தொகை கோரி மனுலைஃபிடம் சமர்ப்பித்தனர். ஆனால், காப்புறுதித் திட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர் விபத்து நேர்ந்தது.
இதை மனுலைஃப் கண்டுபிடித்தது.
இருவரும் நேர்மையான முறையில் நிதி ஆலோசனை வழங்கும் தகுதியை இழந்தவர்கள் என்ற முடிவில் ஆணையம் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

