முன்பின் தெரியாத ஒருவர் ஃபேஸ்புக் மூலம் நட்புகொள்ள வந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட 65 வயது மூதாட்டி, உதவி என்ற பெயரில் அந்த நபர் விரித்த மோசடி வலையில் சிக்கி $1,078,053.62 பணத்தை இழந்துவிட்டார்.
வெறும் 15 நாள்களில் அரங்கேறிய அந்த மோசடியில் அந்த மூதாட்டி இழந்த பணம், நாற்பது ஆண்டுகளாக அவர் சேமித்து வைத்த தொகை.
திருவாட்டி டான் (உண்மைப் பெயரன்று) என்ற அவரை ஆகஸ்ட் மாதம் சமூக ஊடகம் வழி தொடர்புகொண்ட ஆடவர், தாம் ஒரு சிங்கப்பூரர் என்றும் பிரிட்டன் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருப்பதாகவும் கூறினார்.
ஓய்வுபெறும் முன்னர் லண்டனில் ஒரு ஹோட்டல் கட்டும் திட்டத்திற்கான பணிகளின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதற்கு சாதனங்கள் வாங்க பணம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
தொடக்கத்தில் தயங்கிய மாதை, சாதனங்கள் வாங்குவதற்கான பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது போன்ற ரசீதை அனுப்பி அந்த ஆடவர் நம்ப வைத்தார். அந்த ரசீதுகள் போலி என்று பின்னர் தெரியவந்தது.
அடுத்தடுத்து தந்திரமாக அந்த ஆடவர் கூறியவற்றை நம்பி அவருக்குப் பணம் அனுப்பத் தொடங்கினார் மூதாட்டி. செப்டம்பர் 4 முதல் 19 வரை தொடர்ந்து அந்த மாது 22 முறை பணம் அனுப்பினார். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் $20,000 அனுப்பினார்.
இறுதியாக $50,000 அனுப்ப தம் 30 வயது மகனிடம் அவர் கடன் வாங்கினார்.
செப்டம்பர் 20ஆம் தேதி அந்த மாது மோசடியில் சிக்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையிலும் நான்கு வங்கிகளிலும் அவர் புகார் அளித்துள்ளார்.

