இணையப் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் மருத்துவ சாதனங்களைத் தரப்படுத்துவதற்கான சோதனை முயற்சி அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை மற்றும் வீடுகளில் இணையக் கட்டமைப்புடன் மருத்துவ சாதனங்களை இணைப்பது அதிகரித்து வரும் நிலையில் உயிர்காக்கும் கருவிகளை இணைய ஊடுருவிகள் சிதைக்கலாம் என்ற அச்சமும் அதிகரிக்கிறது.
அதுபோன்ற ஆபத்தில் இருந்து பாதுகாக்க மருத்துவ சாதனங்கள் அவற்றுக்கு வழங்கப்பட்டு உள்ள இணையப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்க உள்ளனவா என்று சோதித்து தரப்படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் தொடங்க உள்ளது.
இதயச் செயல்பாடு தொடர்பான சாதனங்கள், நீரிழிவு நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் ஊசிகள், சுவாசக் கண்காணிப்புச் சாதனங்கள், ஊடுகதிர் மற்றும் சிடி ஸ்கேனர் போன்றவை இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இவ்வாறு செய்வதன் மூலம் பயனீட்டாளர்களும் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களும் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சரியான சாதனங்களை அடையாளம் கண்டு, தேர்ந்து எடுக்க உதவும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்து உள்ளார்.

