சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொண்ட சீன நாட்டவர் ஒருவரை இரு காவல்துறை அதிகாரிகள் அணுகி அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்டபோது, சோதனையை நிறுத்த அந்த ஆடவர் $76ஐ லஞ்சமாக ஓர் அதிகாரிக்குத் தர முயன்றார். புதன்கிழமையன்று 31 வயது சூ ஷூப்பெய் என்ற அந்த ஆடவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கெம்பாங்கான் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ளை டீசட்டை அணிந்துள்ள ஆடவர் ஒருவர் தொடர்பில் புகார் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் சூவை அப்பகுதியில் கண்டனர். அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்டபிறகு சூ தன்னிடமிருந்த $76ஐ அதிகாரிகளில் ஒருவரிடம் கொடுக்க முயன்றார்.
பலமுறை எச்சரித்தும் சூ லஞ்சம் கொடுக்க முயன்ற நிலையில் அதிகாரிகள் சூவைக் கைது செய்தனர். கைவிலங்குகள் இட்டும் சூ தொடர்ந்து அந்தப் பணத்தை அதிகாரியிடம் நீட்டியதாகக் கூறப்பட்டது.

